சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு.. காலம் தான் பதில் சொல்லும்.. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
கிருஷ்ணகிரி: சசிகலா, தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைவது குறித்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக உட்கட்சி பிரச்னை மூன்று மாதங்களுக்கும் மேலாக பரபரப்பிலேயே இருக்கிறது. ஒருபக்கம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் இரு தரப்பிலும் தொண்டர்களை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நெருக்கம் காட்டி வருவதும் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பீகார்:7 கட்சிகளின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு-ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார் அறிவிப்பு
புகழேந்தி பேச்சு
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவில் குழப்பம் இருக்கும் பட்சத்தில், தொண்டர்களே புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பர் என விதி உள்ளது. அப்படி இருக்கும்போது அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார்.
யாருக்கு பதவி வெறி?
அவர் கிருஷ்ணகிரியில் பேசும்போது, ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி, பதவி வெறி பிடித்தவர் என்று கூறுகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின் பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் வகையில் பதவி வெறிபிடித்து, பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒற்றைத் தலைமை வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறவில்லை.
கட்சிப் பணிகள்
மக்கள் பிரச்னைகள் குறித்து பழனிசாமி பேசாமல், சுயநலமாக ஒருவர் மீது பழி போட்டு பேசுவதிலேயே குறியாக இருக்கிறார். ஆனால், மக்கள் நலனில் அக்கறைகொண்ட ஓபிஎஸ், விமர்சனங்களுக்கு பதில் கூறப்போவதில்லை. அவர் இன்னும் கட்சிப் பணிகளை முடிக்கவில்லை. இதுவரை 40 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் விரைவில் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படுவார்.
இணைப்பு சாத்தியமா?
அனைத்து மாவட்டங்களிலும் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் மாநிலம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கூட்டங்களை நடத்துவார். சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.