சகோதரியின் மகள் திருமண வரவேற்பு விழா.. மருமகளை வாழ்த்திய பேரறிவாளன்
கிருஷ்ணகிரி: தனது சகோதரியின் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட பேரறிவாளன், மருமகளையும் அவரது கணவரையும் இன்முகத்துடன் வாழ்த்தினார்.
தனது தந்தை குயில்தாசனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், ஒரு மாத பரோலில் கடந்த 13-ம் தேதி பேரறிவாளன் சிறையிலிருந்து வெளியில் வந்தார்.
தொடர்ந்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இடையன் காடு கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் பேரறிவாளனின் சகோதரி அன்புமணியின் மகள் செவ்வை - கௌதமன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா கிருஷ்ணகிரியில் உள்ள தேவராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவில் பேரறிவாளன் கலந்து கொண்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற பேரறிவாளன் கடந்த 29 ஆண்டுகளாக எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை.
கடந்த 29 ஆண்டுகளில் முதன்முதலாக இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். ஜோலார்பேட்டையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.