ஊத்தங்கரை ரவுண்டானா காலி.. 7 நாட்களுக்கு பின் நகர்ந்த பெருமாள்.. அடுத்த ஸ்டாப் கிருஷ்ணகிரி!
பெருமாள் சிலை ஊத்தங்கரையில் இருந்து நேற்று கிளம்பியது.
ஊத்தங்கரை: ஊத்தங்கரை ரவுண்டானாவை இடித்து தள்ளி, 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் பெருமாள் சிலை நகர ஆரம்பித்துள்ளது.
வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.
அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. எங்கெல்லாம் தடங்கல்கள், இடைஞ்சல்கள் வருகிறதோ அங்கெல்லாம் சிலை நிறுத்தப்பட்டு, இடையூறுகள் சரி செய்யப்படுகின்றன.
வீடுகள், கடைகள்
வழியில் குறுக்கே வரும் பாலங்கள், கட்டிடங்கள், கடைகள், வீடுகள் என இடித்து அகற்றப்பட்டு பெருமாள் சிலை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகிறது. கடந்த 16-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் நுழைந்தது. பின்னர் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை பாலத்தை தாண்டி கொண்டு செல்ல முடியவில்லை.
பெருமாளை வணங்கினர்
பாலத்தை அவ்வளவு எளிதில் கடக்க முடியாது என்பதாலும், அந்த பகுதியில் சில கட்டிடங்கள் இருந்ததாலும் ராட்சத லாரி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் தரைப்பாலம் அருகிலேயே சிலை நிறுத்தி வைக்கப்பட்டது. இதை அறிந்த மக்கள் திரண்டு வந்து பெருமாளை கும்பிட்டு சென்றார்கள்.
தற்காலிக தரைப்பாலம்
பக்தர்களின் வழிபாடுகள் ஒரு பக்கம் நடந்தாலும், சிலையை மேற்கொண்டு நகர்த்தி செல்வதற்கான வேலைகள் நடைபெற துவங்கின. பாலம் ஏற்கனவே பழுதாகி இருந்ததால், தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அப்பாலத்தை கடக்க நிறைய லாரிகள் வரவழைக்கப்பட்டன. செல்லும் வழியில் தடையாக இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
ரவுண்டானா இடிப்பு
கடைசியாக ஊத்தங்கரை ரவுண்டானாவும் இடித்து அகற்றப்பட்டது. இவ்வளவும் செய்து முடிக்க 7 நாட்கள் ஆனது. அதன்பிறகுதான் பெருமாள் சிலை நகர துவங்கியது. அப்போது பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கோதண்டராமனை வழி அனுப்பி வைத்தனர். இப்போது பெருமாள் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் கொண்டிருக்கிறார். இன்னும் 4 நாட்களில் பெருமாள் கிருஷ்ணகிரிக்கு வந்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது.