ஆற்றுப்பாலத்தில் கோவிந்தா.. மார்கண்டேய நதியில் முகாமிட்ட 64 அடி பெருமாள் சிலை.. அலைமோதும் பக்தர்கள்
கிருஷ்ணகிரி ஆற்றுப்படுகைக்குள் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஆற்றுப்பாலத்தில் பெருமாள் சிலை சிக்கி உள்ளது என்றாலும், கடந்த ஒரு வாரமாக ஒரே கோவிந்தா கோஷம்தான்!!
வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.
அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. சிலை அளவுக்கு அதிகமான எடை என்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடைஞ்சல்கள், தடைகள் வழியெங்கும் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.
மண் சாலை
பெருமாள் சிலை கிருஷ்ணகிரி வழியாக கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையை அடைந்தது. கடந்த 7 தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அடுத்த குருபரபள்ளி வந்தடைந்தது. ஆனால் அங்குள்ள மார்கண்டேய நதி பாலம் அருகே சிலையை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் மண் சாலை அமைத்து சிலையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
பக்தர்கள் செல்பி
அதற்காக ஆற்றுப்பாலத்தின் நடுவிலேயே சிலை வைக்கப்பட்டுவிட்டது. 7 நாட்களாக தொடர்ந்து சிலை அங்கேயே உள்ளதால், பெருமாளை சுற்றி பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. சுற்றுவட்டார பகுதியிலிருந்து மக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். கூடவே செல்பி எடுக்கவும் தவறுவதில்லை. இதனால் ஆற்றுப்படுகையிலிருந்து கோவிந்தா முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அதீத இழுவை
இதனிடையே பாலம் அருகில் மண் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் இந்த பணிகள் தோல்வியில் முடிந்ததால் ராட்சச லாரியை இழுக்க அதீத இழுவை திறன் கொண்ட வாகனத்தை சென்னையிலிருந்து வரவழைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தொடர்ந்து சிக்கல்
அவர்கள் வந்து சரி செய்து, லாரியை ஆற்றுப்படுகையிலிருந்து வெளியே கொண்டு வந்த பிறகுதான் மேற்கொண்டு பயணம் தொடரும். இன்னும் 50 கிலோ மீட்டர் போனால்தான் கர்நாடக பார்டரையே தொட முடியும். அதுவரை இன்னும் எத்தனை எத்தனை சிக்கல்கள் வந்தாலும் எல்லாவற்றையும் தவிடிபொடியாக்கிவிட்டு பெருமாள் முன்னேறிக் கொண்டே இருப்பார்