திருநங்கைகளுக்கு சீர்வரிசை.. சமத்துவ பொங்கல்.. ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
Recommended Video
கிருஷ்ணகிரி: நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளதை கொண்டாடும் வகையில் ஓசூரில் உள்ள ரஜினி ரசிகர்கள், சமத்துவப்பொங்கல் வைத்தும், திருநங்கைகளுக்கு சீர்வரிசைகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. அதிகாலை முதலே திரைப்படத்தை அவரது ரசிகர்கள் சிறப்பு காட்சிகளில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஒசூரில் ரஜினியின் தர்பார் திரைப்படம் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் திரையரங்கின் வாயிலில் கரும்புகளை கட்டி, புதுப்பானைகளில் சமத்துவப்பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது ஒருவருக்கொருவர் பொங்கல் வழங்கி வாழ்த்துக்களை கூறினர்.
தர்பார் திரைப்படத்தில் திருநங்கைகள் ஒரு பாடலுக்கு நடனமாடுவதால் அதனைக்காண இன்று ஏராளமான திருநங்கைகள் தர்பார் திரைப்படத்திற்கு வந்தனர். இதனையொட்டி திருநங்கைகள் அனைவருக்கும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பில் சேலைகள் உள்ளிட்ட சீர்வரிசைப்பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் மற்றும் உணவு வழங்கப்பட்டது.