சசிகலாவை வரவேற்க வெடித்த பட்டாசு... எரிந்து நாசமான 2 கார்கள் - சகுனமே சரியில்லையே
: கிருஷ்ணகிரி அருகே சசிகலாவை வரவேற்க வெடித்த பட்டாசு விழுந்து 2 கார்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது முதலே பரபரப்பும் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற காவல்துறையினரின் தடையை மீறி அமமுகவினர் பட்டாசுகளை வெடித்தனர். இதில் இரண்டு கார்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது.
Recommended Video
சசிகலா வரப்போகிறார் என்று சொன்ன நாளில் இருந்தே தமிழ்நாட்டில் சென்னை தொடங்கி குமரி வரை பதற்றம்தான். போஸ்டர்களை ஒட்டி ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் அமமுக தொண்டர்கள். நாங்களும் சசிகலா ஆதரவாளர்கள்தான் என்று சில அதிமுகவினரும் போஸ்டர்களை ஒட்டுகின்றனர்.
இன்று காலையில் நல்ல நேரம் பார்த்துதான் சசிகலா கிளம்பினார் என்றாலும் சின்னச் சின்ன விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவர் பயணம் செய்த கார் சிறிய விபத்தில் சிக்கிய நிலையில் சசிகலாவை வரவேற்க வெடித்த பட்டாசு விழுந்து இரண்டு கார்கள் எரிந்து சாம்பலானது.
பட்டாசு வெடிக்க தடை
பட்டாசு வெடிப்பதற்கும் பேண்டு வாத்தியங்கள் இசைப்பதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை என்றும், கொடி, தோரணங்கள், பேனர்கள், பிளெக்ஸ் பேனர்கள் அனுமதி இன்றி வைக்கக்கூடாது என்றும், வி.கே.சசிகலா வாகனத்தின் பின்பு ஐந்து வாகனங்கள் மட்டுமே பின் தொடர்ந்து வர வேண்டும் என்றும் காவல்துறையினர் 6 தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்
சசிகலாவிற்கு முதல் தடை
பெங்களூருவில் இருந்தே சசிகலாவிற்கு அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்து வந்தனர். அதிமுக கொடி விவகாரம் உள்பட பல விசயங்களில் அமமுகவினர் தடையை மீறித்தான் வரவேற்பு அளித்து வருகின்றனர். தமிழக எல்லையில் சசிகலாவின் காரை வழிமறித்து காவல்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர்.
முந்த முயன்ற தொண்டரின் கார்
ஓசூர் அருகே சசிகலாவின் கார், ஒரு சிறிய விபத்துக்கு உள்ளானது. சசிகலா வந்த காரின் பின்னால் வந்த வாகனம் ஒன்று முந்த முயன்ற போது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது லேசாக மோதியது. அந்த கார் மோதிய வேகத்தில் மற்றொரு பக்கம் வந்து கொண்டிருந்த சசிகலாவின் காரிலும் லேசாக உரசியது. இந்த சம்பவத்தில் சற்றே அப்செட் ஆனார் சசிகலா.
வெடி விபத்தில் எரிந்த கார்கள்
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி டோல்கேட் அருகே அமமுகவினர் சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் வெடித்தனர். ஏராளமான பட்டாசுகள் வெடித்து சிதறியதால், 2 கார்கள் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினரின் தடையை மீறி பட்டாசு வெடித்து, இரண்டு கார்கள் எரிய காரணமாகிவிட்டனர் அமமுகவினர்.
சகுனமே சரியில்லை
சசிகலா சென்னை வரும் முன்பாக இரண்டு விபத்துகள் ஏற்பட்டு விட்டன. இதனால் கடும் அப்செட் ஆகியுள்ளாராம் சசிகலா. சகுனம் சரியில்லையோ என்று நினைத்துக்கொண்ட சசிகலா வரும் வழிகளில் உள்ள முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு வருகிறார்.