பென்னாகரம் தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டி?.. மகளை எதிர்க்க முத்துலட்சுமி இறக்கப்படுவாரா?
கிருஷ்ணகிரி: பென்னாகரம் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் மகளை சமாளிக்க திமுக கூட்டணி சார்பில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி களமிறக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் அந்தந்த கட்சி சார்பில் விருப்பமனுக்களும் பெறப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பாஜக சார்பில் வீரப்பனின் மகள் வித்யாராணி போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இவர் பாஜக இளைஞரணி மாநில துணை தலைவராகவும் உள்ளார்.
பென்னாகரம்
தற்போது கிருஷ்ணகிரியில்தான் வசித்து வருகிறார். மேலும் இவர் பென்னாகரம் தொகுதியின் பாஜக பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சந்தனக்கடத்தல் வீரப்பனை அப்பகுதியில் உள்ள மக்கள் நன்கு அறிவார்கள். மக்களின் நலனுக்காக வீரப்பன் நிறைய செய்துள்ளார்.
வாய்ப்பு
வீரப்பனுக்கு அந்த பகுதியில் நல்ல பெயர் உள்ளது. இதை எல்லாம் மனதில் கொண்டு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார் வித்யாராணி. எனினும் இவருக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்யும்.
அதிமுக கூட்டணி
வீரப்பனின் மகள் வித்யாராணி அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவில் இருந்து வருகிறார். ஆனால் அவரது தாய் முத்துலட்சுமியோ திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து வருகிறார். ஒரு வேளை பென்னாகரம் தொகுதி தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் முத்துலட்சுமி போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முத்துலட்சுமி
வீரப்பனின் மகள் என்பதை காட்டிலும் மனைவிக்குத்தான் பரிதாப ஓட்டுகள் விழ வாய்ப்புள்ளது. எனவே திமுகவும் அந்த கணக்கை போட்டு பென்னாகரம் தொகுதியை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு விட்டு கொடுக்குமா? ஏற்கெனவே தருமபுரி எம்பி செந்தில்குமார் கடுமையாக போராடி வென்றார். அது போல் மகளை எதிர்த்து முத்துலட்சுமியும் வெல்ல வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.