கிருஷ்ணகிரி டோல்கேட் பூத்தை அப்படியே இழுத்து சென்ற லாரி.. இருவர் பலி.. பதறவைக்கும் வீடியோ
Recommended Video
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நிலைத்தடுமாறி தாறுமாறாக ஓடிய லாரி டோல்கேட்டில் வசூல் மையத்தின் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
கிருஷ்ணகிரி பகுதியில் நகர நெடுஞ்சாலை பகுதியையொட்டி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்று மதியம் சுங்கச்சாவடி ஊழியர்கள் வரி வசூல் செய்யும் பணியில் இருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக ஒரு லாரி வந்தது. அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சுங்கச்சாவடியின் வசூல் மையம் மீது மோதியது.
சிசிடிவி காட்சிகள்
அப்படியே வசூல் மைய பூத்துடன் தட்டு தடுமாறி வந்த லாரி அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன.
அதிர்ஷ்டவசம்
இந்த விபத்து நடப்பதற்கு முன்னர் குழந்தைகளுடன் ஒரே வாகனத்தில் 4 பேர் பயணித்ததும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இல்லாவிட்டால் 4 உயிர்கள் பறி போயிருக்கும். இது வீடியோ மூலம் தெரியவருகிறது.
இருவர் காயம்
இந்த விபத்தில் கிருஷ்ணகிரி பாப்பாரபட்டியை சேர்ந்த சென்னப்பன், திருமலை நகர் பகுதியை சேர்ந்த பரிமளா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் சாவடி ஊழியர் இருவர் பலத்த படுகாயமடைந்தனர்.
லாரி டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் லாரி ஓட்டுனர் சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.