Exclusive: பாமக மேல எனக்கு கோபமா?.. வீரப்பன் மகள் வித்யா பரபரப்பு பேட்டி!
கிருஷ்ணகிரி: அரசியல் மூலம் தனது பகுதி மக்களுக்கு தன்னால் முடிந்த நன்மைகளை செய்வேன் என நம்பிக்கையுடன் உறுதியளிக்கிறார் வீரப்பன் மகள் வித்யா ராணி.
அண்மையில் பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அவரது அரசியல் திட்டங்கள், லட்சியங்கள் பற்றி பேசுவதற்காக வித்யா ராணியிடம் பேசினோம்.
தனது அரசியல் வருகைக்கான காரணம், எதிர்கால செயல்பாடுகள் என்பன உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதன் விவரம் பின்வருமாறு;
கேள்வி: அரசியல் ஆசை எப்போது ஏற்பட்டது? அரசியலுக்கு வந்ததற்கான நோக்கம் என்ன?
பதில்: அரசியல் ஆசை எனக் கூறுவதை விட எனது பகுதி மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்கிற உந்துசக்தி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. மக்களுக்கு என்னால் முடிந்த நன்மைகளை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தால் அரசியலுக்கு வந்தேன். எனது தந்தை வீரப்பனுக்கும் அதிரடிபடை வீரர்களுக்கும் நடைபெற்ற மோதலில் அப்பாவி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் நிச்சயம் நல்லது செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
கேள்வி: பாஜகவில் இணைந்த 6 மாதத்தில் மாநில அளவிலான பொறுப்பு கிடைத்துள்ளது, இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: பொறுப்புணர்வுடன் கூடிய நல்ல வாய்ப்பாகவும் எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் கருதுகிறேன். பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் என்கிற பொறுப்பை வைத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிச்சயம் கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபடுவேன். பெண்கள், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். பாஜக மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் இதற்கான முழு ஆதரவையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறார். மேலும், மாநில தலைமை வழிகாட்டுதலுடன் கட்சி பிறப்பிக்கும் பணிகளை செய்வேன்.
கேள்வி: உங்கள் அம்மா தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருக்கிறார், நீங்கள் பாஜகவில் இருக்கிறீர்கள்...
பதில்: அம்மாவும் நானும் வேறு வேறு கட்சிகளில் இருப்பது உண்மை. ஆனால் நாங்கள் குடும்பத்தில் அரசியல் பற்றி விவாதமோ, பேசுவதோ கிடையாது. நான் பாஜகவில் இணையவிருப்பதை அம்மாவிடம் கூறிய போது அவர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. கட்சி வேறு குடும்பம் வேறு.
கேள்வி: பாஜகவில் இணைவதற்கு முன்பு நீங்கள் பாமகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டதே, உண்மையா?
பதில்: இல்லை அது பொய். பாமகவுக்கும் எங்களுக்கும் எந்த கம்யூனிகேஷனும் இல்லை. முன்பு எங்களுக்கு பாதுகாப்பாக பாமக இருந்தது உண்மை தான். ஆனால் அதற்காக கட்சியில் இணையுமாறு அவர்கள் எங்களை அணுகியதில்லை. நானும் படிப்பு, தொழில் என அதில் தான் கவனம் செலுத்தினேன். மற்றபடி எங்களுக்கு பாமக மீது எந்த கோபமோ, வருத்தமோ கிடையாது.
கேள்வி: பாஜக அரசின் செயல்பாடுகளை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறதே, அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: எதிர்க்கட்சிகளுக்கு வேலையே குறை சொல்வது தானே, அதில் என்ன ஆச்சரியம் உண்டு. எதிர்க்கட்சிகள் அதிகம் விமர்சிக்கிறார்கள் என்றால் மத்தியில் பாஜக அரசு மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று தானே அர்த்தம். மக்களிடம் பிரதமர் மோடிக்கு செல்வாக்கு உயரக்கூடும் என்ற அச்சத்தில் கூட குற்றஞ்சாட்டலாம் அல்லவா.
ரிஸ்க் எடுக்க தயாரான இந்தியா.. "ராஜாங்க உறவுகளை" கண்டு நடுங்கிய சீனா.. வெளிப்படையாக வைத்த கோரிக்கை!
கேள்வி: உங்களுக்கு பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என ஆசையில்லையா?
பதில்: நிச்சயம் சந்திக்க வேண்டும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து அவர்களிடம் வாழ்த்து பெற வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் இப்போது கொரோனா காலம் என்பதால் அதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. கூடியவிரைவில் இவர்களை சந்தித்து அவர்களிடம் ஆசியும், வாழ்த்தும் பெறுவேன்.