கட்டுக்கடங்காத கொரோனா பரவல்.. 30ல் ஒருவருக்கு பாதிப்பு.. "Major Incident" அறிவித்த லண்டன் மேயர்
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் 30 பேரில் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாகவும், இப்படியே நிலைமை போனால் மருத்துவமனையில் படுக்கை இல்லாத நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ள நகர மேயர், சாதிக் கான், மக்களின் எச்சரிக்கைக்காக 'மேஜர் இன்சிடென்ட்' அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இதுபற்றி ட்விட்டர் பதிவில் லண்டன் மேயர் கூறியிருப்பதாவது: லண்டனுக்கு, மேஜர் இன்சிடென்ட் என்ற அறிவிப்பை நான் இன்று வெளியிடுகிறேன். ஏனென்றால் மிக மோசமான நிலைமைக்கு கொரோனா நோய் தொற்று லண்டன் நகரில் வந்துவிட்டது.
லண்டனில் வசிக்க கூடியவர்களின் 30 பேரில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருக்கிறது. இப்போது உடனடியாக நாம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தேசிய சுகாதார சேவை பெரும் பாரத்தை சுமக்க நேரிட்டு. மேலும் பலர் பலியாக கூடிய நிலைமை வரக்கூடும்.
ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன்.. 'முருங்கை மரம்' ஏறும் டிரம்ப்.. டென்ஷனில் அமெரிக்கா
நீங்கள் வெளியே வர அவசியம் இல்லாவிட்டால் தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். உங்களை, உங்கள் குடும்பம், உங்கள் நண்பர்கள் மற்றும் பிற லண்டன்காரர்களை பாதுகாக்க வீட்டிலேயே இருங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
லண்டன் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் திடீரென 27 சதவீதம் அளவுக்கு அதிகரித்து விட்டது. வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை அளிக்கக்கூடிய நோயாளிகள் எண்ணிக்கை 42 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
BREAKING:
— Mayor of London (gov.uk/coronavirus) (@MayorofLondon) January 8, 2021
Today I have declared a major incident in London because the threat this virus poses to our city is at crisis point. One in 30 Londoners now has COVID-19. If we do not take immediate action now, our NHS could be overwhelmed and more people will die.
இங்கிலாந்தில் ,உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஏற்கனவே உள்ள வைரசைவிட, 70% வேகமாக நோய் பரப்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் லண்டன் மேயர் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜர் இன்சிடென்ட் என்ற அறிவிப்பு வெளியானால், அனைத்து அவசர சேவைப் பிரிவுகளும், சிறப்பு ஏற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என்பது பொருளாகும். அவசரகால சேவைகள் மற்றும் மருத்துவமனைகள் தாங்கள் வழக்கமாக மேற்கொள்ளக்கூடிய பணிகளை செய்ய முடியாமல் இருக்கிறது என்பதும் இதற்குப் பொருள் ஆகும்.