சிஏஏ குறித்து தவறான தகவல்.. விவாதத்தில் இந்தியாவை ஆதரித்து பேசிய இரு இந்திய வம்சாவளி எம்பிக்கள்
லண்டன்: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மக்கள் மனதில் தவறான கருத்துகள் பரப்பப்பட்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் விவாதத்தில் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று அதாவது இந்திய நேரப்படி இன்று அதிகாலை விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தை வெளியுறவு விவகாரங்கள் துறைக்கான ஐரோப்பிய தூதரகத்தின் துணைத் தலைவர் ஹெலேனா தல்லி தொடங்கி வைத்தார். இவர் இந்திய- ஐரோப்பிய யூனியன் இடையேயான நல்லுறவுகள் குறித்து வலுவான கருத்துகளை எடுத்துரைத்தார்.
இரு நாடுகளிடையே நடைபெறும் 15ஆவது மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரசல்ஸ் வருகையை மேற்கோள் காட்டினார். மேலும் தல்லி கூறுகையில் அரசியலமைப்பு சட்டத்தின் இணக்கத்தை மதிப்பிடுவது இந்திய உச்சநீதிமன்றத்தின் கடமை என நாங்கள் நம்புகிறோம்.
சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம்.. பெரும்பாலான எம்பிக்கள் எதிர்ப்பு
கடந்த வாரங்களில் நாட்டில் காணப்பட்ட பதற்றங்கள், வன்முறைகளை கட்டுப்படுத்த நீதித் துறையின் செயல்பாடுகள் கை கொடுக்கும் என நம்புகிறோம் என தனது உரையை முடித்தார். இந்த நிலையில் இரு இந்திய வம்சாவளி எம்பிக்கள் தினேஷ் தமிஜா, நீனா கில் ஆகியோர் இந்தியாவுக்கு ஆதரவான கருத்துகளை முன் வைத்தனர்.
அவர்கள் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியன குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன என இந்தியாவுக்கு ஆதரவாக பேசினர். பிரெஞ்ச் எம்பி தேரி மரியானி பாகிஸ்தானுக்கு ஆதரவான சட்டம் என மறைமுகமாக விமர்சித்தார்.
மற்ற நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை மற்ற எம்பிக்கள் கண்டித்தனர். பாகிஸ்தான் வம்சாவளி எம்பி ஷஃபாக் முகமது உள்ளிட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டம் முற்றிலும் பாகுபாடானது என தெரிவித்தனர்.