சார், சொர்க்கத்துல எங்கப்பா இருக்கார்.. அவர் கிட்ட சேத்துடுங்க.. "ஜெர்க்" ஆன போஸ்ட் ஆபீஸ்!
சொர்க்கத்தில் உள்ள தந்தைக்கு மகன் எழுதிய கடிதம் வைரலாகிறது.
லண்டன்: "போஸ்ட்மேன், இத சொர்க்கத்துல இருக்குற எங்க அப்பாக்கிட்ட சேத்துடுங்க ப்ளீஸ்..." என்ற அந்த லட்டரை பார்த்ததும் போஸ்ட் ஆபீஸ்ல இருக்கிற எல்லாருக்கும் தூக்கி வாரிப்போட்டது.
ஜேஸ் என்ற சிறுவன். வயசு 7தான் ஆகிறது. 4 வருஷத்துக்கு முன்பே ஜேஸ் தந்தை இறந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 28. அப்படியென்றால் ஜேஸ்-க்கு வயது 3தான்.
விவரம் தெரியாது... சின்னஞ்சிறு குழந்தை.. தன் அப்பா எங்கே என்று வீட்டில் கேட்டதற்கு "அப்பா சொர்க்கத்துக்கு போய் இருக்கிறார்" என்று மட்டுமே இவ்வளவு நாள் பதில் வந்திருக்கிறது.
பிறந்த நாள் வாழ்த்து
அதனால் இப்போது வரை ஜேஸ் தன் அப்பா சொர்க்கத்தில்தான் இருப்பதாக நினைத்து கொண்டு உள்ளான். இந்த நிலையில் அப்பாவுக்கு பிறந்த நாள் வந்திருக்கிறது. அதனால் குட்டி பையன் ஜேஸ் தன் அப்பாவுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி ஒரு லட்டர் எழுதினான்.
கண்கள் குளமானது
பிறகு, அந்த லட்டரின் உறைமீது, "போஸ்ட்மேன், இத சொர்க்கத்துல இருக்கிற எங்க அப்பாக்கிட்ட சேர்த்துடறீங்களா? ப்ளீஸ்?" என்று எழுதியிருந்தான். இதை படித்து பார்த்துதான் போஸ்ட் ஆபீஸே தடுமாறி விட்டது. எல்லார் கண்களும் குளமாகி விட்டன. ராயல் மெயில் என்பதுதான் அந்த போஸ்ட் நிறுவனத்தின் பெயர். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அந்த நிறுவனத்துக்கு, அந்த கடிதத்தை தூக்கி போடவே மனசில்லை.
சொர்க்கத்தில் அப்பா
அதனால் சிறுவனுக்கு பதில் அனுப்ப முடிவு செய்தது. அதன்படி, "டியர் ஜேஸ், உங்களுடைய கடிதத்தை நாங்கள் சென்று சேர்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஏனென்றால் அண்டவெளிகளை தாண்டி தான் சொர்க்கம் உள்ளது. அங்குதான் உன் அப்பா இருக்கிறார்.
சேர்த்து விடுகிறோம்
அதனால் பால்வெளிகளை தாண்டி போய் இந்த கடிதத்தை கொண்டு சென்று உங்கள் அப்பாவிடம் சேர்க்க வேண்டும். இருந்தாலும் எங்களுக்கு எல்லாமே கஸ்டமர்கள்தான். அதோடு உங்களுடைய இந்த மெயில் எங்களுக்கு ரொம்ப முக்கியமானது என்பதால், உங்களது கடிதத்தினை சொர்க்கத்துக்கு சென்று சேர்த்து விடுகிறோம்" என்று கூறியுள்ளது.
வைரலாகிறது
இப்படி சிறுவன் எழுதிய கடிதம், அதற்கு நிறுவனம் எழுதிய கடிதம் இரண்டையும் அந்த போஸ்ட் நிறுவனத்தின் உதவி மேலாளர் தங்கள் ஆபீஸ் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. தந்தையை இழந்தது கூட தெரியாமல் போஸ்ட் மேனுக்கு சிறுவன் கடிதம் எழுதியதை நினைத்து ஏராளமானோர் மனம் உருகி போய்விட்டனர். அதற்கு பதில் எழுதிய நிறுவனத்துக்கோ பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.