அணில் போல் உதவி.. அடித்து நொறுக்கிய சிறுவன்.. நெகிழ்ந்து போன பில்டர்.. வைரலாகும் அந்தக் கடிதம்!
தனக்கு உதவிய சிறுவனுக்கு கட்டுமானர் ஒருவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
லண்டன்: கட்டுமானத்தில் தனக்கு உதவிய ஒரு சிறுவனுக்கு, கட்டுமானர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சமூகவலைதளங்களில் பல அருமையான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒரு விஷயம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டெப் கெம்ப் எனும் பெண் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "தற்போது தான் எங்கள் வீட்டில் முன் முற்றத்தை அமைத்தோம். அந்த கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த கட்டுமானருக்கு 6 வயதேயான எனது மகன் உதவி வந்தான். அதன் காரணமாக அவனுக்கு அந்த பில்டர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். இது ஒரு கருணையின் எடுத்துக்காட்டு" என குறிப்பிட்டு, அந்த கடிதத்தின் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார்.
ஆடி 3வது வெள்ளி இன்று வரலாட்சுமி விரதம் கோலாகலம் - வீடுகளில் விழாக்கோலம்
அந்த கடிதத்தில், "ஹாரி, செங்கலை எடுத்து வந்ததற்காகவும், சிறிய தளவரிசை கற்களை சுமந்து வந்ததற்காகவும், செங்கல் வேலைகளில் ஈடுபட்டதற்காகவும், சிமெண்ட் கலவைகளை ஏற்படுத்தி தந்ததற்காகவும், கற்களை அடுக்கியதற்காகவும், கருப்பு நிற பறவைகள் மற்றும் சிலந்திகளின் புகைப்படங்களை எடுத்ததற்காகவும், எனது வாழ்வில் இதற்கு முன் நான் கேட்டிராத அளவுக்கு அத்தனை முறை 'ஏன்' என கேட்டதற்காகவும், அடித்து நொறுக்கும் சிறுவனாக இருந்ததற்காகவும், வரிகள் மற்றும் தேசிய காப்பீடு கழித்து உனக்கு 10 பவுண்ட் தருகிறேன்", என அந்த கட்டுமானர் மிக பாசமாக எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை பார்த்த நெட்டிசன்கள், அந்த சிறுவனுக்கும், கட்டுமானருக்கு இடையே நிகழ்ந்த இந்த கதையை நினைத்து நெகிழ்ந்து போய்விட்டனர். அந்த கடிதம் சுமார் 2.5 லட்சம் லைக்குகளை குவித்து இருக்கிறது. தொடர்ந்து அந்த பதிவை பலரும் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.