இப்படியே போனா அசாஞ்சே செத்துருவாரு.. 60 டாக்டர்கள் அதிரடி கடிதம்..!
விக்கிலீக்ஸ் நிறுவனர் உடல்நிலை குறித்து டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Recommended Video
லண்டன்: " ஜூலியன் அசாஞ்சே நிலைமை மோசமாகி வருகிறது. அவர் சிறைக்குள்ளேயே மரணத்தைத் தழுவும் அபாயம் உள்ளது" என்று 60 டாக்டர்கள் சேர்ந்து இங்கிலாந்து உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
விக்கிலீக்ஸ் நிறுவனர்தான் இந்த ஜூலியன் அசாஞ்சே. 48 வயதாகும் இவர் ஆஸ்திரேலிய நாட்டவர். உளவு பார்த்த வழக்கில் இவர் மீது அமெரிக்க அரசு வழக்குப் போட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில் அடைபட்டுள்ளார் அசாஞ்சே. இவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அங்கு இவர் நாடு கடத்தப்பட்டால், அவருக்கு 175 ஆண்டு கால சிறைத் தண்டனை கிடைக்கும் அபாயம் உள்ளது.
அமெரிக்காவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று இங்கிலாந்து அரசை வலியுறுத்தி வருகிறார். தற்போது தென் கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அசாஞ்சே அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல் நிலை மோசமாகி வருகிறது. இதுதொடர்பாக 60 டாக்டர்கள் இணைந்து ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரீத்தி படேலுக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறுகையில், " அசாஞ்சேவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றியாக வேண்டும். இல்லாவிட்டால் சிறைக்குள்ளேயே அவர் உயிரிழக்க நேரிடும். அக்டோபர் 21ம் தேதி அவர் லண்டன் கோர்ட்டில் ஆஜர் ஆனபோதும், நவம்பர் 1ம் தேதி வெளியான ஐநா சிறப்பு தூதர் நில்ஸ் மெல்ஜெர் கூறிய தகவல்களையும் வைத்துப் பார்க்கும்போது அசாஞ்சேவின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிய வருகிறது.
அசாஞ்சே தொடர்ந்து இதுபோல விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டால் அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று நில்ஸ் கூறயுள்ளார். எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்ற வலியுறுத்துகிறோம்" என்று அந்த டாக்டர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.
விக்கிலீக்ஸ் மூலம் பல்வேறு நாட்டு ரகசியத் தகவல்களை அம்பலமாக்கி உலகையே புரட்டிப் போட்டவர் அசாஞ்சே. குறிப்பாக அமெரிக்க தூதரகங்கள் எப்படி செயல்படுகின்றன. எப்படி உள்ளூர் அரசு தனியார் தகவல்களை திரட்டுகின்றன என்பதை அம்பலப்படுத்தியவர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஈராக் தொடர்பான அமெரிக்க ஆவணங்களை இவர் வெளியிட்டு உலகையே உலுக்கி விட்டார். இதனால் அமெரிக்க அரசுக்கு அசாஞ்சே மீது கடும் கோபம். இதனால் உளவு பார்த்ததாக வழக்குப் போட்டுள்ளது.
தற்போது அசாஞ்சே உடல் நிலை மோசமாகி வருவதால் இங்கிலாந்து அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.