நடப்பாண்டு இறுதிக்குள் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து... ஆஸ்ட்ராஜெனிகா நம்பிக்கை!
லண்டன்: ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனிகாவின் தயாரிப்பு மருந்தான கோவிஷீல்ட் நடப்பாண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என்று ஆஸ்டாராஜெனிகாவின் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல் சோரியட் நம்பிக்கை அளித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனிகாவின் கூட்டு தயாரிப்பு மருந்தான கோவிஷீல்ட் இந்தியாவில் நடப்பு வாரத்தின் துவக்கத்தில் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பிரிட்டன் போன்ற நாடுகளில் ஏற்கனவே மனித ஆய்வு முடிந்து இருந்த நிலையில் இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வை நடத்துவதற்கு முடிவு செய்து இருந்தது.
இந்தியாவில் மேற்கொண்ட மனித பரிசோதனையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பெண் ஒருவருக்கும் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பிரிட்டனிலும் இதேபோல் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த சோதனையை இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக இந்த மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கு அனுமதி பெற்று இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நேற்று அறிவித்தது. இதையடுத்து உலகம் முழுவதும் இந்த மருந்து பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்ட்ராஜெனிகா மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல் சோரியட் கூறுகையில், ''நடப்பாண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்து கொண்டு வரப்படும். முழு உலகமும் இன்று தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மருந்து கொடுத்ததால், நரம்பு பாதிப்பு ஏற்பட்டதா அல்லது தடுப்பு மருந்து கொடுத்த பின்னர் உடலில் இருந்த பாதிப்பு வெளியே தெரிந்ததா என்பது குறித்து தனிப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இவர்களது அறிக்கை வரும் வரை நாம் அனைவரும் அமைதி காக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு உடன் இணைந்து ஆஸ்ட்ராஜெனிகா கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இதன் இரண்டாவது மற்றும் மூன்றாம் மனித ஆய்வு துவங்க இருக்கும் நிலையில், ஆஸ்ட்ராஜெனிகாவின் பங்கு பெரிய அளவில் முன்னேற்றம் கண்டது. பிரிட்டன் மற்றும் இந்தியாவில் தலா ஒருவருக்கு தடுப்பு ஊசி செலுத்திய பின்னர் நரம்பு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த ஆய்வு தற்காலிகமாக உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஆஸ்ட்ராஜெனிகாவின் பங்கு மதிப்பு சுமார் 0.6% லண்டனில் சரிந்துள்ளது. இதையடுத்து முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆஸ்ட்ராஜெனிகா தலைமை நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.