தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விமானத்தில் இருந்து விழுந்த உடல்... லண்டனில் பரபரப்பு நிமிடங்கள்
லண்டன்: கென்யா ஏர்வேஸ் விமானத்தில் இருந்து உடல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.41 மணியளவில் தெற்கு லண்டனின் கிளாபாமில் உள்ள ஒரு தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான நபரின் உடல் விழுந்ததாக கென்யா ஏர்வேஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஹீத்ரோ விமான நிலையத்தில் பிற்பகல் 3.50 மணிக்கு விமானம் தரையிறங்கியது.
தரையிறங்குவதற்கு சற்று முன்னர், விமானத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபரின் உடல் விழுந்துள்ளது. இந்த மரணம் 'துரதிர்ஷ்டவசமானது' என்று கூறியுள்ள விமான நிறுவனம், பிரிட்டிஷ் மற்றும் கென்ய அதிகாரிகளின் ஒத்துழைப்பை கேட்டுள்ளது.
இதனிடையே, விமானத்தை பரிசோதித்த போது, பின்புற இடது தரையிறங்கும் கியரில் உணவு மற்றும் உடைகள் அடங்கிய ஒரு பையை போலீசார் கண்டுபிடித்தனர். உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நைரோபியில் இருந்து ஹீத்ரோவுக்கு வந்த விமானத்தில் இருந்து பெரும் சத்தத்துடன் ஒன்று விழுந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்து பார்த்த போது, நீல நிற சட்டை மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்திருந்த நபர் புல்தரையில் விழுந்து கிடந்தார். அருகில் சென்று பார்த்த போது, சடலமாக கிடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும், பெயர் குறிப்பிடபடாத பெண் ஒருவர் கூறியுள்ளார்.
நைரோபியில் இருந்து ஹீத்ரோவுக்கு செல்ல 4,250 மைலை கடக்க வேண்டும். சுமார் எட்டு மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். இதே போல், கடந்த செப்டம்பர் 2012 இல், மொசாம்பிக்கைச் சேர்ந்த 30 வயதான ஜோஸ் மாடாடா, அங்கோலாவிலிருந்து ஹீத்ரோ செல்லும் விமானத்தின் அண்டர்கரேஜில் இருந்து விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.