வெடிகுண்டு மிரட்டல் புரளிதான்....லண்டனில் இருந்து புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்!
லண்டன்: வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நெவார்க் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் லண்டனில் அவசரமாக தரை இறக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க்-க்கு ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. லண்டன் வான்பரப்பில் சென்ற போது விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து லண்டன் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் 2 ஜெட் விமானங்கள் பாதுகாப்புடன் லண்டன் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.30மணிக்கு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து சோதனைகள் நடைபெற்றன.
இது தொடர்பாக முதலில் ட்விட்டரில் பதிவிட்ட ஏர் இந்தியா நிறுவனம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தரை இறக்கப்பட்டதாக கூறியது. பின்னர் அதை நீக்கிவிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக தரை இறக்கப்பட்டதாக பதிவு செய்தது.
லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தில் தனியே ஒரு பகுதியில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. பிரதான விமான நிலையத்தின் பணிகள் எதுவும் பாதிக்கவில்லை என தெரிவித்தது.
இந்நிலையில் ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை. இதையடுத்து லண்டனில் இருந்து நெவார்க் நோக்கி விமானம் சென்று கொண்டிருக்கிறது என்றார்.