"ஆண் உறுப்புடன் பிறந்தால்!" ஒரு பிரதமர் இப்படி பேசலாமா! வாங்கி கட்டிக்கொள்ளும் போரீஸ் ஜான்சன்
லண்டன்: திருநங்கைகள் குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ள கருத்துகள் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக இப்போது போரிஸ் ஜான்சன் உள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அவர், பல்வேறு விவகாரங்களிலும் பழமைவாத கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார்.
விடை கிடைக்காத 4 கேள்விகள்.. எடப்பாடிக்கு காத்திருக்கும்
மேலும், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வாங்கிக் கட்டிக் கொள்வதும் அவரது வழக்கம். அதுபோலத் தான் இப்போதும் கூட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகள்
திருநங்கை விளையாட்டு வீரர்களைப் பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என்று பிரிட்டனில் வலதுசாரி அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதற்குப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அங்குள்ள விளையாட்டு அமைப்புகளுக்கும் இது குறித்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தடை
ஏற்கனவே அங்குள்ள நீச்சல் அமைப்பு திருநங்கைகள் பெண்கள் பிரிவில் பங்கேற்கத் தடை விதித்துள்ளது. மற்ற விளையாட்டு அமைப்புகளும் இதேபோல தடை விதிக்க வேண்டும் எனப் பிரிட்டனை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி வலியுறுத்துகிறது. இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த போரிஸ் ஜான்சன், "விளையாட்டு அமைப்புகள் தடை விதிக்கப்படுவது குறித்து விரிவான தகவல்கள் எனக்குத் தெரியாது.
சர்ச்சை கருத்து
அதேநேரம் அவர்கள் நடவடிக்கையில் தவறு இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நான் முன்பு கூறிய கருத்தையே திரும்பச் சொல்கிறேன். எந்தவொரு பெண்ணும் ஆண் உறுப்புடன் பிறக்க முடியாது! ஆணாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே ஆண் உறுப்பு இருக்கும். எனவே, ஆண் உறுப்புடன் பிறக்கும் நபர்களைப் பெண்ணாக எப்படிக் கருத முடியும்!" என்றார்.
வித்தியாசம்
பெண்ணுக்கும் திருநங்கைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நீண்ட மவுனத்திற்குப் பின்னர், "ஆம், வித்தியாசம் இருக்கிறது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "ஒரு சமூகமாக நாம் எல்லோரையும் முடிந்தவரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது மிக மிக முக்கியம். நான் எப்போதும் அதற்காகவே நின்றேன்.
பிரச்சினை
பாலியல் பிரச்சினைகளில் இருந்து பாலினம் தொடர்பான பிரச்சினைகளுக்குச் செல்லத் தொடங்கும் போது, வேறு பிரச்சினைகள் எழ தொடங்குகிறது. முன்பு இதில் இருக்கும் 3 சிக்கல்கள் குறித்துப் பேசி உள்ளேன். திருநங்கைகளாக மாறக்கூடிய வயது, பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் இருக்கும் சிரமங்கள் ஆகியவை குறித்துப் பேசி உள்ளேன். இவை சிக்கலான பிரச்சினை என்பதே நான் உணர்ந்தே உள்ளேன்" என்றார்.
கொந்தளிப்பு
போரிஸ் ஜான்சன் கருத்து திருநங்கை மற்றும் LGBT சமூகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே LGBT சமூகத்தினரின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாகவும் இதுபோன்ற நேரத்தில் பிரதமர் பதவியில் இருக்கும் நபர் இப்படிப் பேசுவது சரியில்லை என்றும் சாடி உள்ளனர். மேலும், பிரிட்டன் அரசியலில் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகப் பலரும் அணி திரண்டு உள்ளதால், பிரச்சினையைத் திசை திருப்பவே அவர் இப்படிப் பேசுவதாகச் சாடி உள்ளார்.