உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது... ஆதாரமே பலமா இருக்கு..அதிர்ச்சி அளிக்கும் போரிஸ் ஜான்சன்!
லண்டன்: உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
புதிய உருமாறிய வைரஸ் 1,000 ஆண்களில் 13 அல்லது 14 பேரைக் கொல்லும் என்று இங்கிலாந்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வலன்ஸ் கூறினார்.
இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பால் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன.
ஆட்டிப்படைக்கும் கொரோனா
ஒரு ஆண்டை கடந்தும் இன்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் உலகின் அனைத்து பகுதிகளிலும் கரும்புள்ளியாக மாறி விட்டது. கொரோனா வைரஸை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
புதிய வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸின் புதிய வடிவமாக உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் உருவெடுத்து ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் ஊரடங்கு நடைமுறைகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டன. அந்த நாட்டு உடனான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொடர்புகளை மற்ற நாடுகள் துண்டித்தன. இந்தியாவிலும் இங்கிலாந்தில் வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடுமையாக இருக்கும்
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் முதல் வைரஸைபோல் அதிகம் வீரியமில்லை. இதனால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறைவாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் பலர் கூறியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
அதிக உயிரிழப்பு ஏற்படும்
இந்த வைரஸ் தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன், ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது போரிஸ் ஜான்சன் கூறுகையில், இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும். இந்த வைரஸ் அதிக பாதிப்புகளையும், ,அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தலாம். தற்போதைய அனைத்து ஆதாரங்களும் இதனை காட்டுகின்றன, என்று கூறினார்.
1,000 பேரில் 13 பேர் இறப்பார்கள்
இங்கிலாந்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வலன்ஸ் கூறுகையில், இங்கிலாந்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 1,000 ஆண்களில், முதல் வைரஸ் 10 பேரைக் கொல்லும். புதிய உருமாறிய வைரஸ் 1,000 ஆண்களில் 13 அல்லது 14 பேரைக் கொல்லும். இது இறப்பு விகிதத்தில் 30 சதவிகித உயர்வைக் குறிக்கிறது. ஆனாலும் இந்த வைரஸால் மரணத்தின் முழுமையான ஆபத்து குறைவாகவே உள்ளது என்று அவர் கூறினார்.
ஆதாரங்கள் உள்ளது
தொற்று நோய் நிபுணர் இயன் ஜோன்ஸ் கூறுகையில், உருமாறிய வைரஸ் மிகவும் கடுமையானது. இதனால் ஏற்படும் இறப்பு விகிதம் 1 சதவிகிதம் அல்லது 1.3 சதவிகிதம் உயர்வு என்பது உண்மையில் ஆபத்தானதாகும் என்றார். கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரும், தொற்று-நோய் நிபுணருமான பால் ஹண்டர், இறப்பு விகிதத்தில் சிறிதளவு அதிகரித்ததற்கான ஆதாரங்கள் உண்மையில் ஏமாற்றமளிக்கிறது. ஆனால் பிரிட்டன் தடுப்பு நடவடிக்கை மூலம் இந்த நோயை எவ்வாறு எதிர்த்துப் போராடுகிறது என்பதே இதை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பால் ஹண்டர் தெரிவித்தார்.