இந்திய குடியரசு தின விழாவில் போரிஸ் ஜான்சன் பங்கேற்பார் - பிரிட்டன் அமைச்சர் ட்விட்டரில் உறுதி
டெல்லியில் நடக்கும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வார் என பிரிட்டன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லண்டன்: இந்தியாவுடன் பலமான உறவை தொடர வேண்டும் என பிரிட்டன் உறுதி பூண்டுள்ளதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நிச்சயம் இந்திய பயணத்தை மேற்கொள்வார் என்று பிரிட்டன் அமைச்சர் லார்டு தாரிக் அகமது தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. தற்போது வளர்சிதை மாற்றமடைந்துள்ள வைரஸ் முந்தைய வைரசை விட 70 சதவிகிதம் வேகமாக பரவும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்திய குடியரசு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பை ஏற்று, குடியரசு விழாவில் கலந்து கொள்ள போரிஸ் ஜான்சன் சம்மதித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டது. நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆய்வில், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமானதாக இருந்தது. கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய கொரோனா வைரசை காட்டிலும் வேகமாக பரவும் தன்மை உடையதாகவும், வீரியமாக இருப்பதாவும் தெரியவந்தது. நிலைமை கைமீறிப் போய்விட்டதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இந்நிலையில், புதிய கொரோனா எதிரொலியாக இந்திய பயணத்திட்டத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியானது. குடியரசு தின விழாவில் பங்கேற்க அவர் டெல்லி வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
An important trip laying the groundwork for @BorisJohnson’s visit next month. @DominicRaab is absolutely right - we want an even stronger relationship with India, as part of our work in the Indo-Pacific region https://t.co/jQvXVzu3ef
— Lord (Tariq)Ahmad of Wimbledon (@tariqahmadbt) December 21, 2020
இந்நிலையில் இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரிட்டன் அமைச்சர் லார்டு தாரிக் அகமது; இந்தியாவுடன் பலமான உறவை தொடர வேண்டும் என பிரிட்டன் உறுதி பூண்டுள்ளதால் போரிஸ் ஜான்சன் நிச்சயம் இந்திய பயணத்தை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.