புது கட்டுப்பாடுகள்... வாகன சோதனைகள்... ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது உறவை முடித்துக் கொண்ட பிரிட்டன்
லண்டன்: பல மாத இழுபறிக்குப் பின்னர், புத்தாண்டு நள்ளிரவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறியது.
ஐரோப்பிய நாடுகளின் நலன்களுக்காகக் கடந்த 1993ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இதில் 27 ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் அனைத்து நாடுகளும் தடையற்ற வர்த்தகம், போக்குவரத்து, ஒரே நாணயம் எனப் பல பலன்களைக் கொண்டுள்ளன.
பிரிட்டன் வெளியேற்றம்
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டிலுள்ள தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாகக் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பிரிட்டன் மக்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவே வாக்களித்தனர்.
வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறி
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கடந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியே பிரிட்டன் அதிகார்பூர்வமாக வெளியேறிவிட்டது. இருப்பினும், வெளியேறிய பிறகும் இருவருக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர வேண்டும் என்று பல தலைவர்களும் விரும்பினர். நீண்ட இழுபறிக்குப் பின்னர், கிறிஸ்துமஸ் தினத்தன்று வர்த்தக ஒப்பந்தத்திலும் ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள்
நேற்று இரவு 11 மணிக்கு முதல் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுவதுமாக வெளியேறியது. இனிமேல் ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்தச் சட்டங்களையும் பிரிட்டன் பின்பற்றாது. புத்தாண்டு முதல் பிரிட்டன் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, நேற்றிரவு 11 மணிக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் வாகனங்கள் எல்லையிலுள்ள சோதனை சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டது.
ஒப்பந்தங்கள்
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கு எவ்வித கூடுதல் வரிகளும் வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தும் எவ்வித மாற்றமும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றங்கள் என்ன
இனி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வருபவர்கள் 90 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினால் விசா பெற வேண்டும். அதேபோல ஐரோப்பியாவில் இருந்து பிரிட்டன் திரும்புபவர்கள் எடுத்து வரும் மதுபானம், சிகரெட் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
போரிஸ் ஜான்சன் மகிழ்ச்சி
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறியதற்கு அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார், "தடுப்பு மருந்து விநியோகம் உள்ளிட்ட பலவற்றில் இனி நாம் சற்று வித்தியாசமான மற்றும் விவேகமான முடிவுகளை எடுக்கலாம். நமது நண்பர்களான ஐரோப்பிய நாடுகளைவிட நாம் சிறப்பாகச் செயல்படலாம்" என்றார்.