பிரிட்டன் வகை கொரோனா... உலகையே புரட்டிப் போடும்... ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
லண்டன்: மிகவும் வேகமாகப் பரவி வருவதால் பிரிட்டன் வகை கொரோனா நிச்சயம் உலகத்தையே புரட்டிப் போடும் என்று பிரிட்டனின் மரபணு கண்காணிப்பு திட்டத்தின் தலைவர் ஷரோன் மயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகெங்கும் கொரோனாவின் தீவிரம் கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் பிரிட்டன் நாட்டில் பரவ தொடங்கிய உருமாறிய கொரோனா, வைரஸ் பரவலை மீண்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த வகை கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாமல் போகலாம் என்ற செய்தியும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிகளையும் மருத்து நிறுவனங்கள் தொடங்கியுள்ளனர்.
மிகப் பெரிய பாதிப்பு
இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாமல் போகலாம் என்று பிரிட்டனின் மரபணு கண்காணிப்பு திட்டத்தின் தலைவர் ஷரோன் மயில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த உருமாறிய கொரோனா தான் உலகெங்கும் வேகமாகப் பரவி வருவதாகவும் இது உலகில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி
உலகெங்கும் சுமார் 23.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. பைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் என பல்வேறு நிறுவனங்களும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. இருப்பினும், உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகப் பலன் அளிக்க அந்த தடுப்பூசிகளில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டியதிருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து உருமாறும் கொரோனா
இது குறித்து பிரிட்டன் ஆராய்ச்சியாளர் ஷரோன் மயில் மேலும் கூறுகையில், "தற்போது வரை பிரிட்டன் வகை கொரோனாவுக்கு எதிராக அனைத்து தடுப்பூசிகளும் பலன் அளித்தே வருகின்றன. இருப்பினும், இந்த பிரிட்டன் வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இவை தொடர்ந்து உருமாறிய கொண்டே வருகின்றன. எனவே, ஒரு கட்டத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறையலாம்" என்றார்.
பிரிட்டன் வகை கொரோனா
பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதைப் போலவே தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க வகை கொரோனா மனிதர்கள் மத்தியில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சித்துள்ளன. ஏற்கனவே, இந்த குறிப்பிட்ட வகை கொரோனாவுக்கு எதிராகச் செயல்படும் வகையில் மாடர்னா நிறுவனம் தனது தடுப்பூசியில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது.
பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்
ஷரோன் மயில் மேலும் கூறுகையில், "பிரிட்டன் வகை கொரோனா மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும் இவை மிக வேகமாகப் பரவுகின்றன. எனவே, உலகெங்கும் இந்த பிரிட்டன் வகை கொரோனா பரவ வாய்ப்பு அதிகம். இவை தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதால், மிக விரைவாகப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதே வைரஸ் பரவலை நிறுத்த ஒரே வழி" என்றும் அவர் குறிப்பிட்டார்.