ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் எதிர்ப்பு.. பிரக்ஸிட் வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி
லண்டன்:பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்தது. தெரசா மே அரசுக்கு இந்த தோல்வி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.அதே நேரத்தில், இந்திய வம்சாவளி எம்பிக்களில் பெரும்பான்மையானோர் பிரக்ஸிட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், 1973ம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தில் செயல்படும் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால், பிரிட்டன் தனித்துவத்தையும், இறையாண்மையையும் இழந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது பற்றி முடிவு செய்யும் பொது வாக்கெடுப்பு, 2016ம் ஆண்டு நடைபெற்றது. அதில் பெரும்பாலானோர் பிரிட்டன் ஐரோப்பிய யூனியிலிருந்து பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர். பிரிட்டனின் இந்த வெளியேற்ற முடிவுதான் பிரக்ஸிட் என்று அழைக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை வரும் மார்ச் 29ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான விதிகளை வகுக்கவில்லை என கூறப்படுகிறது.இது குறித்து எம்.பி.க்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் தெரசா மே, பிரக்ஸிட்டை அமல்படுத்த தேவையான விதிகளை விரைந்து வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தோல்வி அடைந்தால், அது மன்னிக்க முடியாத நம்பிக்கை மீறல் என்றும் தெரசா மே கூறி இருந்தார்.இந்நிலையில், பிரக்ஸிட் மீதான பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 432 பேர் பிரக்ஸிட்டுக்கு எதிராகவும் 202 பேர் பிரக்ஸிட்டுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இந்த வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்தது. பிரிட்டன் வெளியேற்றத்துக்கான கெடு முடிய இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில் தெரசா மே அரசுக்கு இந்த தோல்வி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வாக்கெடுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெரும்பான்மையான எம்பிக்கள் பிரக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
தொழிலாளர் கட்சியில் உள்ள 7 எம்பிக்களும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் உள்ள பிரக்ஸிட் ஒப்பந்துக்கு எதிராக ஓட்டு போட்டுள்ளனர். ஆதரவாக அலோக் சர்மா என்பவரும், இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனும், அமைச்சருமான ரிஷி சுனக் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா, தன்மன்ஜீத் சிங் தேசி, ப்ரீத்கவுர் கில் மற்றும் வலேரியா வாஸ் ஆகியோரும் பிரக்ஸிட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.