இங்கிலாந்து அசத்தல்.... ஃபைசர் தடுப்பூசி போடும் பணி.... 90 வயது பாட்டிக்கு முதல் வாக்சின்!
லண்டன்: இங்கிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி பொதுமக்களுக்கு போடும் பனி தொடங்கியது. அந்த நாட்டை சேர்ந்த 90 வயது மார்கரெட் கீனன் என்ற பாட்டிக்கு முதன் முதலில் இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டதை மிகவும் பாக்கியமாக கருதுவதாக மார்கரெட் கீனன் புன்னகை மலர தெரிவித்தார். மற்ற உலக நாடுகளும் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர தீவிர பணியில் களமிறங்கி உள்ளன.
கொரோனா என்னும் அரக்கன் உலக நாடுகளை இன்னும் தன் பிடியில் வைத்திருப்பதால் அதனை விரட்டியடிக்க கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.அமேரிக்கா,ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு நிறுவனம் தாங்கள் தயாரித்த கொரோனா வாக்சின் பரிசோதனை முறைகளில் உள்ளன.
இந்த வரிசையில் அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் முன்னணியில் உள்ளது. ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் பாதுகாப்பானது என தெரியவந்தது. இதனையடுத்து கடந்த வாரம் இந்த தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்து உலகின் உலகின் முதல் நாடாக திகழ்ந்தது.
பிரிட்டனில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி- 90 வயது மூதாட்டிக்கு முதலில் செலுத்தப்பட்டது!
இந்த நிலையில் இங்கிலாந்தில் இன்று கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மத்திய இங்கிலாந்தில் கோவென்ட்ரி நகரில் உள்ள மருத்துவமனையில் மார்கரெட் கீனன் என்ற 90 வயது பாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் ஃபைசர் தடுப்பூசி பெற்ற உலகின் முதல் நபர் என்ற பெருமையை மார்கரெட் கீனன் பெற்றுள்ளார்.
அடுத்த வாரம் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள மார்கரெட் கீனன் பாட்டி இது குறித்து புன்னகை மலர கூறியதாவது:-
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்ட முதல் நபராக நான் மிகவும் பாக்கியம் அடைகிறேன். இது நான் விரும்பும் சிறந்த பிறந்தநாள் பரிசு. புத்தாண்டில் ஆரோக்கியமாக குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்க எதிர்நோக்கி உள்ளேன் என்று கூறினார்.நண்பர்களால் மேகி என்று அழைக்கப்படும் கீணனுக்கு ஒரு மகள், ஒரு மகன் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் உள்ளனர்.