மார்ச் 14ல் 1140, மார்ச் 29ல் 19500 பேருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பிரிட்டன்.. 6 மாதம் ஊரடங்கு?
லண்டன்: பிரிட்டனில் அடுத்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு ஏதேனும் ஒரு வகையான லாக்டவுன் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜென்னி ஹாரிஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதும் உயிரிழப்பை ஏற்படுத்துவது என்பத மேற்கத்திய நாடுகளில் தான் அதிகமாக உள்ளது. ஐரோப்பாவின் 27 நாடுகளிலும், பிரட்டனில், அமெரிக்காவிலும், ஈரானிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிரிட்டனில் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன், மற்றும் அமைச்சர்கள் உள்பட பலருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இது வரை பிரிட்டனில் கொரானா வைரஸ் பாதிப்பு என்பது 19522 பேருக்கு ஏற்பட்டுள்ளது 1228 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 135 பேர் குணமடைந்துள்ளனர்.
2 வாரத்தில் 18000 பேருக்கு
பிப்ரவரி 9ம் தேதி 9 பேருக்கு இருந்த கொரோனா வைரஸ், மார்ச் 14ம் தேதி 1140 ஆக உயர்ந்தது.ஆனால் அதன்பிறகுதான் கொரோனா வைரஸ் பரவும் வேகம் மின்னல் வேகத்தில் அதிகரித்தது. மார்ச் 21ம் தேதி 5000 ஆக அதிகரித்தது. மார்ச் 27ம் தேதிக்குள் 14 ஆயிரம் ஆக அதிகரித்தது. அடுத்த 2 நாட்களில் அதாவது மார்ச் 29ம் தேதிக்குள் 19 ஆயிரத்தை 500ஐ தாண்டி உள்ளது. எனவே ஒவ்வொரு நாளும் பரவும் வேகம் என்பது இனி தான் மிக அதிகமாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ அதிகாரி தகவல்
இந்நிலையில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிரட்டன் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜென்னி ஹாரிஸ் கூறுகையில், பிரிட்டனில் அடுத்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு ஏதேனும் ஒரு வகையான லாக்டவுன் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
என்ன சூழ்நிலை வரும்
மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது.இப்போது ஊரடங்கு நீக்கப்படுவதை அரசு விரும்பவில்லை. சூழ்நிலைகளை பொறுத்து ஊரடங்கு இன்னும் ஆறு மாதத்திற்கு நீட்டிக்கப்படலாம். இவ்வளவு பெரிய ஊரடங்கு எவ்வளவு பெரிய சூழ்நிலைகளுக்கு கொண்டு செல்லும் என்பது தெரியவில்லை.
கண்காணிப்பில் இளவரசர்
கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது அதிகமாக இருந்தாலும் மக்கள் வீட்டிலேயே இருந்தால் பாதிப்பு குறையும். கடந்த வாரம் 6903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த வாரம் தொடக்கத்திலேயே 2710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தற்போதைய நிலையில் அடுத்த 3 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். பிரதமர் போரிஸ் ஜான்சன், இளவரசர் சார்லஸ், அமைச்சர் மாட்ஹான் காக் ஆகியோர் கொரோனா பாதிப்பால் தொடர் கண்காணிப்பில் உள்ளார்கள்" என்றார்.