கொரோனா பாதித்தவர்களுக்கு மன நோய், மூளை பாதிப்பு ஏற்பட கூடும்.. பக்க விளைவு பற்றி லண்டன் பல்கலை. ஷாக்
லண்டன்: கொரோனா வைரஸ் வெறும் நுரையீரலை பாதிப்பதில்லை, மூளை வீக்கம், பக்கவாதம், மனநோய் மற்றும் மயக்கம் உள்ளிட்ட கடுமையான நரம்பியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பு மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கை முக்கியமானது.
ஏனெனில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற ஐயப்பாடுகளை, இந்த ஆய்வு எழுப்புகிறது.
18 வயதில் 62 முறை டயாலிசிஸ்.. கொரோனா பாதிப்பு வேறு.. இளைஞரை வெற்றிகரமாக காப்பாற்றிய அரசு மருத்துவமனை
லண்டன் ஆய்வு
லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (யு.சி.எல்) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்ட 43 பேருக்கு, தற்காலிக மூளை செயலிழப்பு, பக்கவாதம், நரம்பு சேதம் அல்லது பிற கடுமையான மூளை பாதிப்புகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடம் தீவிரமாக ஆய்வு நடந்து வருகிறது.
பழைய தொற்று நோய்கள்
இந்த ஆராய்ச்சியின் முதல்கட்ட முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில், கொரோனா நோய் மூளையை சேதப்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. 1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்க்குப் பின்னர் 1920 கள் மற்றும் 1930 களில் என்செபலிடிஸ் தொற்று நோய் பரவியபோதும் இதேபோன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன.
மூளை பாதிப்பு
கொரோனா வைரஸால் ஏற்படும் நோய் பெரும்பாலும் நுரையீரலைப் பாதிக்கும் சுவாச நோயாகும், ஆனால் நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் சிறப்பு மூளை மருத்துவர்கள் கூறுகையில், மூளையில் அது ஏற்படுத்தும், தாக்கத்திற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்கிறார்கள்.
மீண்டவர்கள் கவனம்
"என் கவலை என்னவென்றால், இப்போது கொரோனா பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். ஒரு வருட காலத்தில் 10 மில்லியன் (அதாவது 1 கோடி) பேர், சிகிச்சைக்கு பிறகு மீட்கப்படுவார்கள் என்று நம்புவோம். அந்த மக்களுக்கு அறிவாற்றலில் குறைபாடு ஏற்பட்டால், அது அவர்கள் பணிகளில் மட்டுமல்லாது, அவர்களின் அன்றாட வீட்டு வேலை திறனையும், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது " என்று கனடா நரம்பியல் விஞ்ஞானி அட்ரியன் ஓவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நம்பிக்கை தகவல்
இந்த பாதிப்பு, அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் செய்தி. இருப்பினும், வரும் முன் காப்பதே சிறப்பானது என்பதை மக்கள் உணர்ந்து, தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடத்தப்பட்ட ஆய்வு விரிவாக்கப்பட்டால், கொரோனா பாதித்தவர்களில் எத்தனை சதவீதம் பேருக்கு மூளையில் பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.