இதயமே வெடித்து விட்டது.. வென்டிலேட்டர் வைத்தும் முடியலை.. கலங்க வைத்த பூர்ணிமாவின் கடைசி நிமிடங்கள்!
இங்கிலாந்தில் கொரோனா தாக்கி இந்திய டாக்டர் பூர்ணிமா உயிரிழந்தார்
லண்டன்: "எங்க இதயமே சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.. எங்களை விட்டு இவ்ளோ சீக்கிரம் டாக்டர் பூர்ணிமா போய்விடுவார் என்று நினைக்கவே இல்லை.. வென்டிலேட்டர் வைத்தும் பூர்ணிமாவை காப்பாற்ற முடியவில்லை" என்று கொரோனாவால் உயிரிழந்த இந்திய பெண் டாக்டர் குறித்து, இங்கிலாந்து டாக்டர்கள் கண்ணீர் மல்க கூறுகிறார்கள்!!
Recommended Video
டாக்டர் பூர்ணிமா நாயர்.. 55 வயதாகிறது.. பூர்வீகம் கேரளா.. கல்யாணமாகி ஒரு மகன் இருக்கிறார். இவர் ஒரு ஃபேமஸான டாக்டர்.. அதீத திறமையை இங்கிலாந்து சரியாக பயன்படுத்தி கொண்டது.
கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டரில் பூர்ணிமா பணியாற்றி வந்தார்.. எத்தனையோ உயிர்களை காப்பாற்றி மறுவாழ்வு தந்தார்.. அதனால் மிக குறுகிய காலத்திலேயே டர்ஹாமில் புகழ்பெற்றார்.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 3,722 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,003
நோயாளிகள்
தற்போது கொரோனாவைரஸ் தொற்று நோயாளிகளுக்கும் பூர்ணிமா சிகிச்சை தந்து வந்தார்.. எந்நேரமும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தார்.. கரிசனத்துடன் அனைத்து நோயாளிகளும் குணமடைய வேண்டும் என்று கடுமையாக போராடி, அதற்கான சிகிச்சையில் ஈடுபட்டு வந்தார்.. ஆனால் மார்ச் மாதம் 20-ந் தேதி கொரோனாவைரஸ் பூர்ணிமாவையும் சேர்த்து தாக்கியது.
முயற்சி
இதையடுத்து, ஸ்டாக்டன் ஆன் டீஸ் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் உடனடியாக அவரை அனுமதித்தனர்.. பூர்ணிமாவை காப்பாற்ற டாக்டர்கள் எல்லாருமே சேர்ந்து முயற்சித்தனர்.. ஒரு வார முயற்சி பலனிக்காத நிலையில், மார்ச் 27-ந் தேதி முதல் அவருக்கு வென்டிலேட்டர் தரப்பட்டது.. எனினும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு அவர் மரணம் அடைந்தார். இது மற்ற டாக்டர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. பூர்ணிமாவையும் சேர்த்து இங்கிலாந்தில் கொரோனா வைரஸுக்கு பலியான டாக்டர்களின் எண்ணிக்கை 10 ஆகிவிட்டது.
பூர்ணிமா நாயர்
"எல்லாராலும் நேசிக்கப்பட்டவரும், மதிப்புமிக்கவருமான டாக்டர் பூர்ணிமா நாயர் இறந்து விட்டார் என்பதை அறிவிப்பதில் மிகவும் வருந்துகிறோம்... நீண்ட காலமாக கொரோனா வைரஸ்தாக்கிய நிலையிலும் மிகுந்த மன வலிமையுடன் உயிருக்கு போராடி வந்தார்... ஆனாலும் அது பலனற்று போய்விட்டது.. பேரழிவை ஏற்படுத்தியும் விட்டது. எங்கள் நினைவுகளில் எப்போதுமே பூர்ணிமா இருப்பார்.
பிரார்த்தனைகள்
எங்கள் பிரார்த்தனைகளிலும் டாக்டர் பூர்ணிமா நாயர் இருப்பார்" என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் உருக்கத்துடன் தெரிவித்துள்ளது. இதுபோல பல டாக்டர்கள் பூர்ணிமாவை நினைத்து கண்ணீர் வடித்து வருகின்றகனர்.. இவர்களை தவிர குணமான நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் பூர்ணிமாவை பற்றி நினைவுகூர்வதுதான் மலைப்பாக இருக்கிறது.
உருக்கம்
"என் அம்மாவை மரண தறுவாயில் காப்பாத்தினதே டாக்டர் பூர்ணிமாதான், அவங்க இல்லைன்றதை கற்பனை பண்ணி கூட எங்களால பார்க்க முடியல.. என் அம்மாவை அவர் காப்பாத்தி 10 வருஷத்துக்கு மேலாகியும் எங்கள் நன்றியை டாக்டருக்கு சொல்லி கொண்டே இருப்போம்.. இவ்ளோ சீக்கிரம் அவர் நம்மை விட்டு போயிருக்க கூடாது" என்று பெண் ஒருவரும் டாக்டர் பூர்ணிமாவை பற்றி உருக்கத்துடன் சொல்லி உள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பூர்ணிமா சிகிச்சை அளித்து வந்த கொரோனா நோயாளிகளும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்!!