எல்லோருக்கும் பரவ வேண்டும்.. அப்போதுதான் தடுக்கலாம்.. கொரோனாவை எதிர்கொள்ள பிரிட்டன் பகீர் திட்டம்!
பிரிட்டனில் கொரோனா வைரஸை தடுப்பதற்காக அந்நாட்டு அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
லண்டன்: பிரிட்டனில் கொரோனா வைரஸை தடுப்பதற்காக அந்நாட்டு அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. மற்ற உலக நாடுகள் பின்பற்றும் திட்டத்திற்கு அப்படியே எதிர் திசையில் பிரிட்டன் ஒரு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
உலகம் முழுக்க கொரோனா காரணமாக பல பகுதிகள், நகரங்கள் மூடப்பட்டுள்ளது. மொத்தமாக இத்தாலி நாடே இந்த வைரஸ் தாக்குதலால் மூடப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு நகரங்கள் இந்த வைரஸ் தாக்குதலால் மூடப்பட்டு இருக்கிறது.
இந்தியாவிலும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு கொரோனா வைரசை தேசிய பேரிடராக அறிவித்து மிக தீவிரமாக செயலாற்றி வருகிறது. ஆனால் இதற்கு எதிராக பிரிட்டன் புதிய செயல் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
ஆனால் பிரிட்டன் எப்படி
பிரிட்டன் அரசின் தலைமை விஞ்ஞானிகள் கொடுத்த அறிவுரையின் படி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதன்படி அந்நாட்டில் அதிகமாக நிறைய பேருக்கு கொரோனா ஏற்பட வேண்டும். குறைந்த பட்சம் 65% பேருக்கு கொரோனா ஏற்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ஆம் நீங்கள் சரியாகத்தான்படிக்கிறீர்கள், கொரோனாவை தடுப்பதற்கு பதிலாக அதை பரவ வைக்க அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
பரவ வேண்டும்
யுகேவில் தற்போது 1500 பேருக்குத்தான் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. ஆனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு கொரோனா பரவ வேண்டு என்றும் நினைக்கிறார். எத்தனை பேருக்கு கொரோனா பரவுகிறோதோ அந்த அளவிற்கு நல்லது என்று அவர் கூறுகிறார். இதற்கான செயல் திட்டங்களில் அவர் இறங்கி உள்ளார். அங்கு இதன் மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறுகிறார்.
குறையும்
இதற்கு அந்நாட்டு விஞ்ஞானிகள் புதிய காரணம் சொல்கிறார்கள். அதன்படி, கொரோனா வைரஸ் 65% பேருக்கு ஏற்பட்டால், அவர்கள் பிற மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனால் மக்களுக்கு இடையிலான தொடர்பு துண்டிக்கப்படும். அதேபோல் இந்த 65% பேருக்கு வைரஸ் இனி தாக்க வாய்ப்பு குறைவாகும். வைரஸ் ஏற்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டால்தான் இதன் வேகம் குறையும். மொத்தமாக இதனால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு வைரஸ் பரவுவது குறையும். சீனாவில் இப்படித்தான் நடந்தது.
சீனா எடுத்துக்காட்டு
சீனாவில் வைரஸ் வேகம் குறைய காரணம் இதுதான். அங்கு 65%க்கும் அதிகமான பேருக்கு வுஹனில் கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இதனால் மக்கள் மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் மொத்தமாக வெளி உலக தொடர்பை இழந்தனர். அதேபோல் இந்த வைரஸ் எத்தனை பேருக்கு அதிகமாக பரவுகிறதோ அளவிற்கு இதை கட்டுப்படுத்த முடியும். இதுதான் திட்டம் என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
அரசே முயல்கிறது
இதனால் அந்நாட்டில் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. பொது போக்குவரத்து, விமான போக்குவரத்து, பொது விழாக்கள், அரசு விழாக்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. அங்கு எந்த நகரமும் மூடப்படவில்லை. கொரோனா சோதனைகள் கூட சரியாக செய்யப்படவில்லை. அரசு மிகவும் ஜாலியாக இந்த வைரஸை எதிர்கொண்டு வருகிறது. உலக நாடுகளை இந்த செயல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பெரிய எதிர்ப்பு
இதற்கு பல நாட்டு விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் அவருக்கு மீண்டும் வைரஸ் தாக்குதல் வராது என்று நிரூபிக்கப்படவில்லை. இது தவறு. அதேபோல் 65% பேருக்கு கொரோனா தாக்கினால், பலர் பலியாக வாய்ப்புள்ளது. அதை எப்படி அரசு கட்டுப்படுத்தும் என்ற திட்டமும் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
லேசாக பின் வாங்கியது
அங்கு இதற்கு மக்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த செயல் திட்டத்தில் இருந்து அந்நாட்டு அரசு கொஞ்சமும் பின் வாங்கி உள்ளது. முக்கியமாக, சில விளையாட்டு போட்டிகளை மட்டும் அரசு தடை செய்து இருக்கிறது. மற்றபடி இந்த வைரசுக்கு எதிராக அந்நாட்டு அரசு பெரிதாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.