லாக்டவுன் கால சர்வதேச கவிதைப்போட்டி... காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற பரிசளிப்பு விழா
லண்டன்: கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளும் லாக்டவுனில் உள்ள நிலையில், உலக மனிதநேய அமைப்பு சார்பாக கோவிட்-19 கால கவிதைப்போட்டி சர்வதேச அளவில் நடத்தப்பட்டது.
அதில் உலகெங்கும் இருந்து பங்கேற்ற படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கான கவிதைகளை லண்டனில் உள்ள உலக மனிதநேயம் அமைப்புக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்தனர்.
அதில் சிறந்த கவிதைகளை எழுதி அனுப்பிய பல நாடுகளை சேர்ந்த 11 பேருக்கு டொபாகோ தீவின் முன்னாள் அதிபர் அந்தோணி கர்மோனா காணொலி மூலம் பாராட்டு தெரிவித்ததுடன் இ சான்றிதழும் அளித்தார்.
சர்வதேச அளவில்
லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலக மனிதநேய அமைப்பு சார்பில் கோவிட் 19 கால கவிதை போட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கொரோனாவால் ஏற்பட்ட படிப்பினைகள், தாக்கம், மாற்றம், ஆகியவகளை அடிப்படையாக வைத்து போட்டிகான கரு வரையறுக்கப்பட்டது. லாக்டவுன் காரணமாக வீடுகளில் இருப்போரை உத்வேகப்படுத்தும் முயற்சியாக இந்தப் போட்டி முன்னெடுக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கில்
இதனிடையே இந்த போட்டிக்கு தாங்களே எதிர்பார்க்காத வகையில் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு இருந்ததாக கூறுகிறார் உலக மனிதநேய அமைப்பின் தலைவர் அப்துல் பாசித். மேலும், மொழிவாரியாக சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுக்க அந்தந்த மொழிகளில் புலமையுடைய ஒருவரை பணியமர்த்தியதாக தெரிவித்தார்.
முன்னாள் அதிபர்
கோவிட் 19 கால கவிதைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா காணொலிக் காட்சி மூலம் நேற்று மாலை லண்டனில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டொபோகோ தீவின் முன்னாள் அதிபர் அந்தோனி கர்மோனா படைப்பாளிகளை பாராட்டி அவர்களின் இலக்கிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தினார். மேலும், அவருடன் ரஷ்யா, கனடா, அல்பேனியா, மலேசியா, போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த முக்க்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பாக பூர்ணிமா ஆனந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஊக்கப்படுத்தும் செயல்
கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் மிகுந்த கவலையில் உள்ள தருணத்தில் அவர்களை அந்த கவலையில் இருந்து மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக இந்த போட்டியை தாம் கருதுவதாக டொபோகோ தீவின் முன்னாள் அதிபர் அந்தோனி கர்மோனா குறிப்பிட்டு பேசினார். இது போன்ற புதுமையான மக்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என உலக மனித நேய அமைப்பை அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே அந்தோனி கர்மோனாவுக்கு மனிதநேய பாதுகாவலர் என்ற சிறப்பு விருது அளிக்கப்பட்டது.