ஆக்ஸ்போர்ட் வேக்சின்.. நேரடியாக சீரம் நிறுவனத்திற்கே விசிட் அடிக்கும் மோடி.. நவ. 28ம் தேதி ஆய்வு!
லண்டன்: ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொரோனா வேக்சின் மருந்தை இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வரும் நிலையில், பிரதமர் மோடி சீரம் நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்வையிட உள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் ஆஸ்டெராசெனெகா உடன் இணைந்து இந்த மருந்தையே உற்பத்தி செய்கிறது.
இந்த வேக்சினுக்கு இந்தியாவில் கோவிட்ஷீல்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ்: டிசம்பருக்குள் அமெரிக்காவில் கோவிட் 19 தடுப்பு மருந்தா?
சோதனை
இந்த கொரோனா வேக்சின் மருந்தை இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வரும் நிலையில், பிரதமர் மோடி சீரம் நிறுவனத்தில் பார்வையிட உள்ளார். சீரம் நிறுவனத்திற்கு நவம்பர் 28ம் தேதி பிரதமர் மோடி செல்கிறார்.வேக்சின் உற்பத்தி மற்றும் சோதனையை பார்வையிட மோடி சீரம் நிறுவனத்திற்கு செல்கிறார்.
கடைசிக்கட்டம்
இறுதிக்கட்ட மனித சோதனையில் இந்த மருந்து உள்ளது. இந்த மருந்தின் 3ம் கட்ட மனித சோதனையின் இடைக்கால முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கொரோனா வேக்சின் 70% வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி
அதாவது இந்த மருந்து 70% தடுப்பாற்றல் கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தில் அதிக டோஸ் எடுக்கும் போது 62% தடுப்பாற்றல் உள்ளது. ஆனால் அதிக டோஸ் எடுத்துவிட்டு பின் குறைவான டோஸ் ஒன்று எடுத்தால் 90% தடுப்பாற்றல் உள்ளது கண்டுபிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தின் கோவிட்ஷீல்ட் மருந்து தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கை அளித்து வருகிறது.இதனை 2-8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைத்தால் போதும். இந்த மருந்தை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், முதல் 50% உற்பத்தியை இந்தியாவிற்குத்தான் கொடுக்கும் என்று உறுதி செய்துள்ளது.
விலை குறைவு
இந்தியாவில் இதன் விலை 1000க்கும் குறைவாக இருக்கும். அடுத்த வருடம் ஜூலைக்குள் இந்த மருந்தில் 400 டோஸ்களை உற்பத்தி செய்ய அந்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி சீரம் நிறுவனத்தில் பார்வையிட உள்ளார். முன்னதாக நிதி ஆயோக், மருத்துவ குழு, வேக்சின் ஆராய்ச்சி குழு என்று பல்வேறு குழுவுடன் மோடி வேக்சின் குறித்து ஆலோசனை செய்தார்.