கொரோனா வேக்சின்.. இதுவரை இல்லாத அளவிற்கு உற்பத்தி செய்ய வேண்டும்.. இந்தியாவை நாடும் ஆக்ஸ்போர்ட்
லண்டன்: கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றிபெற்றுள்ளது. இந்த மருந்துக்கு தற்போது AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நல்ல முன்னேற்றம்.. முதல் தடுப்பூசி மக்களுக்கு எப்போது போடப்படும்.. உலக சுகாதார அமைப்பு பதில்
என்ன அறிவிப்பு
இந்த தடுப்பு மருந்து குறித்து தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த கொரோனா தடுப்பு மருந்து மற்ற தடுப்பு மருந்துகளை போலவே செயல்படும். இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸில் இருக்கும் புரோட்டின் கூம்புகளை குறி வைக்கும். இந்த புரோட்டின் கூம்புகள்தான் செல்களை துளைத்துக் கொண்டு உள்ளே செல்லும்.
தாக்கி அழிக்கும்
இதை தாக்கி அழிக்கும் வகையில் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களை, இந்த தடுப்பூசி தூண்டிவிடும். அதேபோல் இந்த தடுப்பு மருந்து வெள்ளை ரத்த அணுக்களில் ஒரு வகையான டி செல்களை உருவாக்கும்.இந்த டி செல்கள் ஏற்கனவே உடலில் இருக்கும் கொரோனா செல்களையும் அழிக்கும். இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களும் இதன் மூலம் குணமடைவார்கள்.
வைரஸ் பாதிப்பு
ஏற்கனவே உள்ளே வந்த வைரஸ்களை, அதனால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கிறது. அதேபோல் புதிதாக வரும் வைரஸ்களை அழிக்கிறது. இரண்டு வகையில் இந்த தடுப்பு மருந்து செயல்படுகிறது. . இந்த தடுப்பு மருந்தின் சாதனை என்றால் இதுதான்.இதனால் இந்த வைரசுக்கு எதிராக மிக முக்கியமான மருந்தாக இந்த தடுப்பு மருந்து இருக்க போகிறது.
மக்கள் அதிகம்
உலகம் முழுக்க பல லட்சம் பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றால், நிறைய தடுப்பு மருந்துகளை உருவாக்க வேண்டும். அதுதான் மிகப்பெரிய விஷயம். பெரிய அளவில் இதற்கான உற்பத்தியை செய்ய வேண்டும். இந்தியாவின் பங்கு இதில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா தனது உற்பத்தியை பெருக்க வேண்டும்.
தடுப்பு மருந்து
தனது மக்கள் தொகைக்கும், உலகிற்கும் சேர்த்து இந்தியா தடுப்பு மருந்தை உருவாக்க வேண்டும். மக்கள் எல்லோருக்கும் மருந்தை கொடுக்க வேண்டும் என்றால் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செயல்பட வேண்டும். இதுவரை செய்யாத உற்பத்தியை இந்தியா மேற்கொள்ள வேண்டும். வேக்சின் வெளியான உடன் அதன் உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க வேண்டும், என்று ஆக்ஸ்போர்ட் கூறியுள்ளது.