மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியம்... அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில் தலாய்லாமா பேச்சு..!
லண்டன்: மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும், ஒழுக்கமும் மிக முக்கியமானது என தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளை ஒட்டி World Humanitarian Drive அமைப்பு சார்பில் காணொலி மூலம் சிறப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பின் தலைவர் அப்துல் பாசித் சையத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் குடும்ப உறவினர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அதில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் ஆற்றிய தலாய்லாமா அறிவுரைகளையும் நல்கினார். இளம் வயது முதலே தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கத்தையும் பேணி நடக்க வேண்டும் என்றும் தனி மனித அமைதி தான் நிம்மதியான உலகை படைக்கும் எனவும் கூறினார். மேலும், ஒருமைப்பாட்டு உணர்வை மாணவர்களுக்கு ஆசிரியர் பெருமக்களும், பெற்றோரும் போதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அப்துல் கலாமின் சேவைகளை பட்டியலிட்டு புகழாரம் சூட்டிய தலாய்லாமா மாணவர்கள் அவரை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரினார். சமய நல்லிணக்கத்தை கடைபிடித்து அமைதியான உலகை உருவாக்க ஒவ்வொருவரும் உறுதியேற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கடல் கடந்தும் அப்துல் கலாமின் புகழை கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.