சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம்.. பெரும்பாலான எம்பிக்கள் இந்தியாவுக்கு ஆதரவு
லண்டன்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்திய நேரப்படி இன்று அதிகாலை விவாதம் நடைபெற்றது. சுமார் 30 நிமிடங்கள் இந்த விவாதம் நடைபெற்றது. இதன் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டமானது இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது. இது பாரபட்சமானது என்றும் ஆபத்தான மாற்றம் என்றும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் இந்த சட்டத்தால் பல லட்சம் பேர் அகதிகளாகவும் நாடற்றவர்களாகவும் ஆக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் சிஏஏ சட்டத்திற்கு எதிராக 6 தீர்மானங்கள் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டன.
ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 751 எம்.பி.க்களில் 560 பேர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீது இந்திய நேரப்படி இன்று அதிகாலை வாக்கெடுப்பு நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த வாக்கெடுப்பு எம்பிக்களின் முடிவை தொடர்ந்து வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை.
இந்த நிலையில் இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் பெரும்பாலான எம்பிக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சில எம்பிக்கள் மட்டுமே இந்த சட்டத்திற்கு எதிராக பேசினர். மற்ற சிலர் நடுநிலை கருத்துகளை தெரிவித்தனர்.