சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம்.. ஓட்டெடுப்பு மார்ச்சுக்கு ஒத்திவைப்பு
லண்டன்: ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானங்கள் மீது இன்று விவாதம் நடைபெறும்.
இந்தியாவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஆனால், இதில் முஸ்லீம்கள் மட்டும் பாரபட்சம் காட்டப்படுவதால், நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் கடந்த வாரம், சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 751 எம்.பி.க்களில் 560 பேர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தன. இது சட்டவிரோதமானது எனவும், உலக அளவில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டது.
இந்த தீர்மானங்கள் மீது இன்று அதாவது, இந்திய நேரக் கணக்குப்படி, ஜனவரி 30ம் தேதி அதிகாலை, ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில், விவாதம் நடைபெற உள்ளது. இந்த தீர்மானங்கள் மீது நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும்.
ஐரோப்பிய பாராளுமன்ற தீர்மானம் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டுவதை விமர்சிக்கிறது. மேலும் பூட்டான், பர்மா, நேபாளம் மற்றும் இலங்கையுடன் இந்தியா அண்டை நாடாக இருந்தபோதிலும், இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் தர சி.ஏ.ஏ. சட்டம் மறுக்கிறது. அவர்கள் இந்தியாவில் மிகப்பெரிய அகதிக் குழுவாக இருந்தபோதிலும், குடியுரிமை தர இந்த சட்டம் மறுக்கிறது. இதையும் இந்த தீர்மானம் சுட்டிக் காட்டியுள்ளது.
5 பல்வேறு குழுக்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆறாவது குழுவான, ஐரோப்பிய கன்சர்வேடிவ்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் குழு (ஈ.சி.ஆர்) தனது தீர்மானத்தை வாபஸ் பெற்றுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்வது குறித்த விஷயங்கள் சில இறுதி தீர்மானத்தில் சேர்க்கப்படவில்லை.
வாட்.. இதுதான் கொரோனா மருந்தா? மக்களை ஆபத்தில் சிக்க வைக்கிறது அரசு.. கொதிக்கும் நெட்டிசன்கள்
நாளை இந்த தீர்மானத்தின் மீது, வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது மார்ச் இறுதி வாரத்திற்கு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
"எம்.பி.க்களின் முடிவைத் தொடர்ந்து, இந்தியாவின் குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2019 தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மார்ச் அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அறிக்கை ஒன்று உறுதிப்படுத்தியது.
வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தள்ளிப்போனதில், இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகள் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது முறையாக இந்திய அரசிற்கும், பாராளுமன்றத்திற்கும் ஐரோப்பிய ஆணையத் தலைவர்களுக்கும் அனுப்பப்படும்.