இதய நோய் கூட வருமாம்.. கொரோனா வந்து போனாலும் 18 மாசம் ஜாக்கிரதை! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
லண்டன்: கொரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்பு இன்னமும் முழுமையாக முடிவடையாத நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தாலும் அவர்கள் அடுத்த 18 மாதங்களில் உயிரிழக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனின் 'UK Biobank' எனும் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு இந்த தொற்று பாதிப்பு முதன் முதலாக சீனாவின் வூஹான் மாகானத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இந்த தொற்று பாதிப்பு குறித்து அறிந்துக்கொள்வதற்கு சிறிது காலம் எடுத்துக்கொண்டாலும் விஞ்ஞானிகள் இதற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்ட தொடங்கினர்.
ஆனால் அதுவரை தொற்று பாதிப்பை தாக்குபிடிக்க முடியாமல் ஏராளமானோர் உயிரிழந்தனர். தற்போது வரை மொத்தமாக 66 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 67 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று பரவிய தொடக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட மிக குறைந்த அளவில்தான் தற்போது உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.
கொரோனா பீதி.. 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி - மருத்துவ நிபுணர்கள் அட்வைஸ்
தடுப்பூசி
இதற்கு காரணம் தடுப்பூசிதான். ஆனால் இதுவரை 65.2% மக்கள்தான் உலகம் முழுவம் தடுப்பூசியை முழுமையாக எடுத்துக்கொண்டுள்ளனர். இவ்வாறு முறையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களில் பெரும்பாலானோர் உயிரிழப்புகளிலிருந்து காப்பாற்றப்பட்டாலும், தடுப்பூசி முழுமையாக எடுத்துக்கொள்ளாத நாடுகளில் பதிவாகும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அச்சமடைய வைக்கும் வகையில் இருக்கிறது. இவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிக அளவு இதய நோய்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை கொண்டிருக்கிறார்கள் என 'UK Biobank' தெரிவித்துள்ளது.
இறப்புக்கு வாய்ப்பு
தொற்று பாதிப்பு தொடங்கியபோது சுமார் 1,60,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ம் ஆண்டின் மார்ச் மற்றும் நவம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த மூன்று வாரங்களில் அடுத்தடுத்து உயரிழந்தனர். இவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு சுமார் 81%ஆக இருந்தது. இதுவே சுமார் 18 மாதங்கள் அதாவது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தொற்றால் பாதிக்கப்படாதவர்களை விட தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 5 மடங்காக இருந்தது. இந்த காலத்தில் இவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மக்கள் தொகை
குறிப்பாக இவர்கள் கரோனரி இதய நோய், இதய செயலிழப்பு மற்றும் ஆழமான நரம்பு இரத்த உறைவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தாலும் அவர்கள் குறைந்தபட்சம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன. இந்த முடிவுகள் தடுப்பூசி குறித்த முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்த தொற்று ஏற்பட்டபோது தொடக்கத்தில் இந்தியாவும் சீனாவும்தான் அதிகம் பயந்தன. ஏனெனில் இந்த நாடுகளில்தான் அதிக அளவு மக்கள் தொகை இருக்கிறது.
தடுப்பூசி
ஆனால் சீனா சிறப்பான தற்காப்பு முறையால் தன்னை பாதுகாத்துக்கொண்டது. அந்நாட்டில் தற்போது வரை 92.6% பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 90.2% பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. இங்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 73.0% பேர். இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டவர்கள் 67.6% என்பது குறிப்பிடத்தக்கது.