வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா... வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல புதிய தடுப்பூசிகள் தேவை?
லண்டன்: ஒவ்வொரு உருமாறிய கொரோனா வகைகளுக்கும் ஒவ்வொரு தடுப்பூசி தேவையா என்பது குறித்து தற்போதைய சூழலில் எதுவும் உறுதியாகக் கூற முடியாது என்று ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.
உலகை தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நிறுவனங்களும் தங்கள் தடுப்பூசிகளை உருவாக்கிவிட்டன. இருப்பினும், அவை எல்லாம் உருமாறிய கொரோனா பரவலுக்கு முன் கண்டறியப்பட்டது என்பதால் அவை புதிய கொரோனா வகைகளுக்கு எதிராகப் பலன் அளிக்குமா என்பதில் சந்தேகம் நிலவியது.
மேலும், பல்வேறு நிறுவனங்களும் உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் தடுப்பூசியின் புதிய வேரியண்ட்களையும் உருவாக்க தொடங்கிவிட்டன. ஏற்கனவே, கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில வகை கொரோனா தடுப்பூசிகளில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி, அவை உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகச் செயல்படும் வகையில் மாற்ற ஆராய்ச்சிகளும் நடைபெறுகிறது.
தற்போது கூற முடியாது
இந்நிலையில், இது குறித்து ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர் ஆண்ட்ரூ பொல்லார்ட் கூறுகையில், "உருமாறிய கொரோனா குறித்த செய்திகள் வெளி வர தொடங்கியதும், பலருக்கும் பல கேள்விகள் எழுந்திருக்கும். அதிலும் குறிப்பாக உருமாறிய கொரோனா வகைகளை கட்டுப்படுத்த புதிய தடுப்பூசிகள் தேவையா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்திருக்கும். ஆனால், அது குறித்து தற்போதைய சூழ்நிலையில் உறுதியாகக் கூற முடியாது.
புதிய கொரோனா தடுப்பூசிகள்
இருப்பினும் கூட, ஆராய்ச்சியாளர்கள் புதிய கொரோனா தடுப்பூசி வேரியண்ட்களை உருவாக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, உருமாறிய கொரோனாவைக் கட்டுப்படுத்த புதிய தடுப்பூசிகள் தேவைப்பட்டாலும் அவை மிக விரைவில் கிடைக்கும் என்ற நிலையே தற்போது உள்ளது" என்றார்.
தென்னாப்பிரிக்க வகை கொரோனா
ஆஸ்க்போர்ட் தடுப்பூசி தென்னாப்பிரிக்க கொரோனா வகைக்கு எதிராக குறைவாகவே பலன் அளிப்பதாக முதல்கட்ட தகவல் வெளியானது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தென்னாப்பிரிக்க உருமாறிய கொரோனா தற்போது வரை 41 நாடுகளுக்குப் பரவியுள்ளது.
மிகப் பெரிய பாதிப்பு
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி இந்தக் குறிப்பிட்ட வகை கொரோனாவுக்கு எதிராகப் பலன் அளிக்குமா என்பது குறித்துத் தெரியவில்லை என்று ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர் ஆண்ட்ரூ பொல்லார்ட் தெரிவித்தார். புதிய உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராக தற்போது உள்ள தடுப்பூசிகள் வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால், மீண்டும் கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்து மிகப் பெரிய பாதிப்பை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.