இங்கிலாந்து கப்பலில் சென்ற 18 இந்தியர்கள்.. ஈரான் ராணுவத்திடம் சிக்கி தவிப்பு.. நீடிக்கும் பதற்றம்!
ஈரான் சிறைபிடித்து இருக்கும் இங்கிலாந்து கப்பலில் உள்ள 18 இந்தியர்களை விடுவிக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
லண்டன்: ஈரான் சிறைபிடித்து இருக்கும் இங்கிலாந்து கப்பலில் உள்ள 18 இந்தியர்களை விடுவிக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் வர்த்தகத்திற்கான ஹோர்முஸ் ஜலசந்தியை இங்கிலாந்து எண்ணெய் கப்பல்கள் இரண்டு முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அந்த கப்பல்கள் ஈரான் மூலம் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் உள்ளே செல்ல கூடாது. வெளியே மட்டுமே செல்ல வேண்டும். உள்ளே செல்ல வேறு வழி இருக்கிறது. அதை பயன்படுத்த வேண்டும். இதை இங்கிலாந்து கப்பல் மீறி, அதே பாதை வழியாக கடலுக்கு உள்ளே சென்று உள்ளது.
சிறைபிடித்தது
இந்த நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் இரண்டு இங்கிலாந்து கப்பல்களும் ஈரான் கப்பற்படை மூலம் சிறை பிடிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பை இது பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் வீடியோ வெளியிட்டு இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
எத்தனை பேர்
இந்த கப்பலில் மொத்தம் 23 பேர் இருந்துள்ளனர். இவர்கள் எல்லோரையும் தற்போது ஈரான் ராணுவம் சிறைபிடித்தது. இதில் 18 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 3 பேர் ரஷ்யாவை சேர்ந்தவர்கள். இதன் கேப்டனும் இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனே விடுக்க கோரிக்கை
இந்த ஊழியர்கள் எல்லோரையும் விடுவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 18 இந்தியர்களையும் உடனே விடுவிடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை ஈரானிற்கு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே ஈரானுக்கு ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் அளித்துள்ளது.
4 பேர்
இந்த கப்பலில் சென்ற 18 இந்தியர்களில் 4 பேர் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பினராயி இந்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எப்படி
இந்த நிலையில் இவர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் தரப்பு தெரிவித்து இருக்கிறது. 23 பேரையும் பாதுகாப்பான இடத்தில் வைத்து இருக்கிறோம். அவர்கள் எந்த விதமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகவில்லை என்று ஈரான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.