6 குழந்தைகளை வளர்க்க வேண்டும்... சம்பளம் போதவில்லை... பதவி விலகும் முடிவில் இங்கிலாந்து பிரதமர்..!
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தனக்கு கிடைக்கும் ஊதியத்தை கொண்டு குடும்பம் நடத்த முடியாத காரணத்தால் பதவி விலகும் முடிவில் உள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தற்போது மாத ஊதியமாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்து 402 பவுண்டுகள் பெற்று வருகிறார். இது இந்திய ரூபாய் மதிப்பின்படி ஒரு கோடியே 43 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயாகும்.
இந்நிலையில் இந்தச் சம்பளத்தை கொண்டு குடும்பம் நடத்த முடியாத காரணத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் திட்டத்தில் இருக்கிறார் போரிஸ் ஜான்ஸன். இந்த தகவலை இங்கிலாந்தின் முன்னணி நாளிதழான தி டெய்லி மிரர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
போரிஸ் பிரதமராவதற்கு முன்பு மேடைப்பேச்சு, தலையங்கம் எழுதுதல் என மாதம் 2 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. போரிஸுக்கு 6 குழந்தைகள் இருப்பதால் அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பும், விவாகரத்து பெற்ற முதல் மனைவி மெரினாவுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய கடமையும் உள்ளது.
போரிஸ் ஜான்சன் அண்மையில் தன்னை விட 24 வயது குறைவான கேரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக பிரதமராக இருந்துக்கொண்டே திருமணம் செய்து கொண்ட முதல் தலைவர் போரிஸ் ஜான்சன் என்பது கவனிக்கத்தக்கது.
போரிஸ் ஜான்சனுக்கு மொத்தம் 3 திருமணங்கள் நடைபெற்ற நிலையில் முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டார். மூன்றாவது மனைவிக்கு ஒரு மகன் உட்பட மொத்தம் 6 பிள்ளைகள் போரிஸுக்கு இருக்கின்றனர்.