இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கொரோனா உறுதி - இங்கிலாந்தின் புதிய ஆய்வு
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் புதிய வகை அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பில் இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது. அங்கு உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வரும் சூழலில், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இங்கிலாந்தில் புதிதாக 13,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,996,833-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா புதிய அறிகுறி
இந்நிலையில், Xinhua செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஜூன் 2020 முதல் ஜனவரி 2021 வரை 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், வைரஸின் புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.
பழைய அறிகுறிகள்
தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள அறிகுறிகளான காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், வாசனை / அல்லது சுவை உணர்வு இழப்பு ஆகியவற்றுடன் இந்த புதிய அறிகுறியும் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவலி, தசைவலி
லண்டன் இம்பீரியல் கல்லூரி வெளியிட்டுள்ள ஆய்வின் படி, குளிர், பசியின்மை, தலைவலி மற்றும் தசை வலி உள்ளிட்ட சில புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவிகித நபர்களுக்கு எந்த அறிகுறிகளும் தெரியவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
இறப்பில் ஐந்தாவது
அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா பாதிப்புகளுடன் இங்கிலாந்து நான்காவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கையில் ஐந்தாவது பெரிய நாடாக உள்ளது இங்கிலாந்து.