புயலாகப் பரவும் உருமாறிய பிரிட்டன் கொரோனா பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
லண்டன்: சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகெங்கும் 6.82 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 8.68 கோடியாக ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில்18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் - ராதாகிருஷ்ணன்
உருமாறிய கொரோனா
பிரிட்டனில் வைரஸ் பரவல் திடீரென்று அதிகரித்ததைத் தொடர்ந்து, இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதை அவர்கள் உறுதி செய்தனர். B.1.1.7 என்று அழைக்கப்படும் இந்த உருமாறிய கொரோனாவில், எட்டு புரத மாற்றம் உள்ளிட்ட 23 மாற்றங்களைக் கொண்டு உள்ளது.
புயலாகப் பரவும் புதிய வகை கொரோனா
கடந்தாண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இங்கிலாந்தின் கென்ட் என்ற பகுதியில் முதன்முதலில் இந்த உருமாறிய கொரோனா வகை கண்டறியப்பட்டது. நவம்பர் மாதம், பிரிட்டனில் இந்த உருமாறிய கொரோனா வைரசின் பரவல் வேகமெடுத்தது. அக்டபோர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பிரிட்டனில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வழக்குகளில் பாதி, இந்த உருமாறிய கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
உருமாறிய கொரோனா தோற்றம்
சாதாரண காய்ச்சலைப் போல இல்லாமல், தன்னை அழிக்கும் தன்மை உடையவற்றிலிருந்து பாதுகாக்கத் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் இயல்பை கொரோனா பெற்றுள்ளது. நோயெதிர்ப்பு குறைபாடுள்ள ஒருவரிடம் இருந்து இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தற்போது கருதுகின்றனர். அதாவது, நோய் எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் ஒரு நபரைப் பாதித்த இந்த கொரோனா, அவரது உடலிலிருந்த நோயெதிர்ப்பு சக்திக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
உருமாறிய கொரோனா பரவல்
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட 50 முதல் 74% வரை வேகமாகப் பரவும் என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது. தற்போது லண்டன், கிழக்கு மற்றும் தெற்கு இங்கிலாந்தில் உறுதி செய்யப்படும் கொரோனா வழக்குகளில் 90% பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்.
அதிக ஆபத்தானதா
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் அதிக ஆபத்தானதா என்ற கேள்விக்கு இதுவரை உறுதியான பதில் இல்லை. முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது இவை வேகமாகப் பரவினாலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. இருப்பினும், வேகமாகப் பரவும் இந்த உருமாறிய கொரோனாவால் மருத்துவமனைகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் உடனடி மருத்து சிகிச்சை தேவைப்படுபவர்கள் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மற்ற நாடுகளுக்குப் பரவியுள்ளதா
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் அமெரிக்க, இந்தியா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பல நாடுகள் இந்த உருமாறிய கொரோனா காரணமாகப் பிரிட்டன் உடனான தங்கள் போக்குவரத்திற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் உருமாறிய கொரோனா
பொதுவாக, கொரோனா வைரசின் குழந்தைகளை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால், இந்த உருமாறிய கொரோனா முந்தைய வகைகளை ஒப்பிடும்போது குழந்தைகளை அதிகளவில் பாதிக்கின்றன. இதற்கு வலுசேர்க்கும் வகையில் பிரிட்டனில் இந்த உருமாறிய கொரோனா பரவ தொடங்கியது முதல் குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதும் பல மடங்கு அதிகரித்துள்ளது,
தடுப்பூசி பலன் அளிக்குமா?
இந்த உருமாறிய கொரோனா 23 மாற்றங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பழைய வகை கொரோனாவுடன் இது 99% ஒத்துப்போகிறது. இதனால், அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் இந்த உருமாறிய கொரோனாவுக்கு எதிராகச் செயல்படும் என்றே ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தடுப்பூசியைக் காட்டிலும், மாஸ்க்குகளை அணிவது, தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடிப்பது ஆகியவற்றின் மூலமே வைரஸ் பரவலைப் பெருவாரியாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.