சரமாரி கத்திக் குத்து.. 3 பேர் பலி, 6 பேர் படுகாயம்.. நடுங்கிப்போன ஸ்காட்லாந்து.. தீவிரவாதி கைவரிசை?
லண்டன்: ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸ்காரர் உட்பபட 6 பேர் காயமடைந்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 6 பேரும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், ஆனால், உயிருக்கு ஆபத்தில்லை என்றும், ஸ்காட்லாந்து காவல்துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கிளாஸ்கோ நகரின் பார்க் இன் என்ற ஹோட்டல் பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
800 செம்மறியாடுகளை ஓடவிட்டு... சீனாவை தெறிக்கவிட்ட வாஜ்பாய்.. இப்படியும் ஒரு வரலாறு இருக்கிறது!
அடைக்கலம்
பார்க் இன் ஹோட்டல் தற்போது பிற நாடுகளிலிருந்து ஸ்காட்லாந்துக்கு அடைக்கலம் தேடி வருவோருக்கு தங்குமிடம் வசதி அளிக்க கூடிய பகுதியாக இருக்கிறது. இதன் வரவேற்பறை பகுதியில்தான் இந்த விபத்துச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கத்திக் குத்து
சம்பவ இடத்தில் இருந்த ஜான் என்பவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வரவேற்பறை பகுதியில், ரத்த துளிகள் சிந்தி கிடந்தன. அங்கு ஒருவர் கத்திக்குத்துப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். நான் ஓடிச்சென்று அமைதியாக இருக்கவும், பதட்டப்பட வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். இதேபோன்று கத்திக்குத்துக்கு உள்ளாகிய இன்னொருவரையும் நான் பார்க்க நேரிட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாட்டினர்
கிரேக் மில்ராய் என்பவர் கூறுகையில், நான் இந்த ஹோட்டல் அருகே உள்ள அலுவலகத்தில் இருந்தேன். நான்கு பேர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை பார்த்தேன். ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் தரையில் விழுந்து கிடந்ததை பார்க்க நேரிட்டது. அவர் கத்திக் குத்தாலா, அல்லது துப்பாக்கி சூட்டால் விழுந்துகிடந்தாரா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சுட்டு வீழ்த்தினர்
கத்திக் குத்து நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலின் பின்னணி என்ன? தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பற்றி விசாரணை தொடங்கியுள்ளது.