நேர்மையான ஆராய்ச்சி.. 2 வல்லரசுகளின் வேக்சின் கனவை கலைக்கும் ஆக்ஸ்போர்ட்.. அதிர்ச்சியில் ரஷ்யா, சீனா
லண்டன்: சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் வேக்சின் அரசியல் கனவை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கலைக்க தொடங்கி உள்ளது. இரண்டு நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தை வைத்து திட்டமிட்டு இருந்தது ஒன்று ஆனால் தற்போது நடப்பது வேறு ஒன்று!
Recommended Video
இங்க எல்லாமே அரசியல்தான்.. பல்வேறு தமிழ் படங்களில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்கியம் இது. இந்த வாக்கியம் தற்போது கொரோனா தடுப்பு மருந்து அரசியலுக்கும் பொருந்தும். கொரோனா தடுப்பு மருந்தை மையப்படுத்தி வல்லரசு நாடுகளுக்கு இடையே கடுமையான மோதல், போட்டி நிலவி வருகிறது.
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கிறேன் என்று ரஷ்யா, சீனா, அமெரிக்கா இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் ஆக்ஸ்போர்ட் அமைதியாக சவுக்கடி கொடுத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
ரஷ்யா அறிவிப்பு
கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா கடந்த வாரம் அறிவித்தது. ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டது. மனிதர்கள் மீது இந்த சோதனையை செய்து முடித்து இருக்கிறோம். இதுவரை வெளியான முடிவுகள் சிறப்பாக இருக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. மூன்றாம் கட்ட சோதனைக்கு ரஷ்யா காத்துக் கொண்டு இருக்கிறது.
வெளியாகும்
இரண்டு கட்ட சோதனை வெற்றி பெற்றுவிட்டது என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த நிலையில் பெயர் வைக்கப்படாத இந்த தடுப்பூசியை அடுத்த மாதம் அமலுக்கு கொண்டு வர ரஷ்யா முடிவு எடுத்துள்ளது. ரஷ்யா எப்படி இவ்வளவு வேகமாக மருந்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் என்று உலக நாடுகள் வாயில் விரல் வைக்க தொடங்கி உள்ளது. ரஷ்யா இதற்கான காப்புரிமையை ஏற்கனவே வாங்கிவிட்டது.
சீனா இன்னொரு பக்கம்
இன்னொரு பக்கம் சீனா கொரோனா வைரஸ் தடுப்பு சோதனையில் முன்னிலை வகித்து வருகிறது. சீனாவிலும் இதேபோல் நான்கு முன்னணி நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நான்கு நிறுவனமும் மனித சோதனையில் இருக்கிறது. உலகில் ஒரே நாட்டில் இத்தனை மனித சோதனைகள் நடப்பது இதுதான் முதல்முறையாகும். இதில் இரண்டு இறுதிக்கட்ட மனித சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நிறுவனம்
சீனோவேக், கேன்சினோ ஆகிய நிறுவனங்கள் இதில் இறுதிக்கட்ட மனித சோதனையில் இருக்கிறது. சீனோவேக் நிறுவனம் இறுதி சோதனையை முடித்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் தனது மருந்தை மனிதர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். அதேபோல் கேன்சினோ தற்போது இறுதி சோதனைக்கு தயார் ஆகி வருகிறது.
ஆக்ஸ்போர்ட் முக்கியம்
சீனா, ரஷ்யா இப்படி இறுதி கட்ட சோதனையை முடித்து இருந்தாலும் கூட உலக நாடுக்குள் எல்லாம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றிபெற்றுள்ளது.
இரண்டாம் கட்டம் மட்டுமே
இந்த மருந்துக்கு தற்போது AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து இரண்டாம் கட்ட சோதனையை மட்டுமே கடந்து இருக்கிறது. ஆனாலும் இதற்கு தற்போது உலக அளவில் மதிப்பு மற்றும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. சீன, ரஷ்ய மருந்துகளுக்கு இருக்காத ஆதரவும் வரவேற்பும் ஆக்ஸ்போர்ட் மருந்துக்கு கிடைத்து உள்ளது. இதற்கு நிறைய காரணம் சொல்லப்படுகிறது.
எல்லோரும் வாங்குகிறார்கள்
ஆக்ஸ்போர்ட் மருந்தை இப்போதே இங்கிலாந்து மொத்தமாக 10 கோடி ஆர்டர் செய்துள்ளது. அதேபோல் அமெரிக்காவும் 10 கோடியை ஆர்டர் செய்துள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவின் சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் உடன் இந்தியாவில் அவர்களின் மருந்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்ய உள்ளது. ஆனால் ரஷ்யாவின் மருந்து மனித பயன்பாட்டிற்கு செல்ல இருந்தாலும் கூட அதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
நேர்மையான ஆராய்ச்சி
ஆக்ஸ்போர்ட் மருந்து மீது எல்லோரும் கவனம் செலுத்த முதல் காரணம் அவர்களின் நேர்மையான ஆராய்ச்சி. பாஸ்ட்டிராக் அடிப்படையில் அவர்கள் மருந்து சோதனைகளை செய்தாலும், கூட அதிகமான நபர்களை வைத்து ஆக்ஸ்போர்ட் சோதனை செய்தது.
ஆக்ஸ்போர்ட் - முதல் மற்றும் இரண்டாம் சோதனை - 2500+ பேரிடம் சோதனை. அடுத்த கட்டமாக 10000-50000 பேரிடம் சோதனை செய்ய உள்ளது.
ரஷ்யா - முதல் மற்றும் இரண்டாம் சோதனை - வெறும் 40 பேரிடம் மட்டுமே சோதனை.
சீனா நிறுவனங்கள் சராசரியாக 500க்கும் குறைவான நபர்களிடம் மட்டுமே தங்கள் மருந்துகளை முதல் மட்டும் இரண்டாம் கட்ட சோதனையில், சோதனை செய்துள்ளது .
மிக முக்கியம்
தடுப்பு மருந்து சோதனையில் எத்தனை பேரிடம் மருந்து சோதனை செய்யப்படுகிறது. எத்தனை இனக்குழு மக்களிடம் சோதனை செய்யப்படுகிறது, வயது, பாலினத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்பது கவனத்தில் கொள்ளப்படும். இதை ஆக்ஸ்போர்ட் சரியாக பின்பற்றியது. இதனால் அவர்களின் மருந்து மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யா 50 ரஷ்யர்கள் மீது மட்டுமே சோதனை செய்துள்ளது. சீன, 500+ சீனர்கள் மீது மட்டுமே சோதனை செய்துள்ளது.
பரந்துபட்ட ஆலோசனை
அதேபோல் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சிக்கு சர்வதேச வல்லுநர்கள், ஆராய்ச்சியார்கள் உதவி செய்தனர். பாரம்பரிய முறையில் சோதனைகள் நடந்தது. மிக சரியாக திட்டமிட்டு பணிகள் செய்யப்பட்டது. ரஷ்யா, சீனா போல அவசர கதியில் இதை உருவாக்கவில்லை. இதெல்லாம் போக கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்தை உலக நாடுகளுக்கு எந்த விதமான லாபமும் பார்க்காமல் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரஷ்யா, சீனா இதில் பெரிய லாபம் பார்க்க திட்டமிட்டுள்ளது.
அரசியல் கனவு
சரியாக சொல்ல வேண்டும் என்றால் கொரோனா மருந்து மூலம் மக்களுக்கு உதவ ஆக்ஸ்போர்ட் நினைக்கிறது. ஆனால் ரஷ்யா, சீனா இரண்டும் உலக அரசியலை கட்டுப்படுத்த நினைக்கிறது. இதனால்தான் என்னவோ தற்போது ரஷ்யா, சீனாவின் அறிவிப்புகளை உலக நாடுகள் பெரிதுபடுத்தவே இல்லை. ஆக்ஸ்போர்ட் கொஞ்சம் தாமதமாக அறிவித்தாலும் அதையே பயன்படுத்திக் கொள்கிறோம் என்று உலக நாடுகள் காத்து இருக்கிறது. ரஷ்யா, சீனாவின் வேக்சின் அரசியல் கனவுக்கு சத்தமே இல்லாமல் ஆக்ஸ்போர்ட் வேட்டு வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.