கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்து.. பிரிட்டனில் மனிதர்களுக்கு சோதனை தொடங்கியது!
லண்டன்: பிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கின.
உலகில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த நிலையில் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் குழுவினர் இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.
பொதுவாக தடுப்பு மருந்துகள் வைரஸை பலவீனப்படுத்தியோ மாற்றியமைத்தோ அதன் அடிப்படையில் செய்யப்படுவதாக இருக்கும். ஆனால் இந்த குழுவினர் புதுமையை புகுத்தியுள்ளனர்.
கொரோனோ பாதிப்பை Dexamethasone குணப்படுத்துகிறது- லண்டன் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள்
ஆர்என்ஏ
அதாவது வைரஸின் ஆர்என்ஏவை இவர்கள் செயற்கையாக உருவாக்கியுள்ளார்கள். வைரஸைப் போலவே இருக்கும் இதை சிறிதளவு உடலில் செலுத்துவார்கள். வெளிபுறத்தில் உள்ள வைரஸில் காணப்படும் கூர்மையான புரதங்களை போன்று உருவாக்க நம் உடல் செல்களுக்கு இது கட்டளையிடும். இதன் மூலம் கொரோனா வைரஸை கண்டறிந்து அதை எதிர்த்து போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு இந்த தடுப்பு மருந்து பயிற்சிக் கொடுக்கும்.
கொரோனா வைரஸ்
அது போல் இந்த மருந்தை செலுத்திக் கொண்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கும். மிகவும் நுண்ணிய அளவிலான ஆர்என்ஏ குறியீடு மட்டுமே தடுப்பு மருந்தாக செலுத்தப்படும். ஒரு லிட்டர் செயற்கை ஆர்என்ஏ 20 லட்சம் பேருக்கு மருந்து தயாரிக்க போதும் என்கிறார்கள் மருந்தை கண்டுபிடித்தவர்கள்.
மனிதர்கள்
இந்த மருந்து முதலில் விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது. பயனுள்ள வகையில் நோய் எதிர்ப்பு எதிர்வினையை தூண்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இதை மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
மருந்து
மருந்தை தங்கள் உடலில் செலுத்தி பரிசோதனைக்குள்பட விரும்புவோருக்கு மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த சில வாரங்களில் 300 -க்கும் மேற்பட்டோருக்கு இந்த மருந்து செலுத்தப்படுகிறது. இந்த முதல் பட்ட பரிசோதனைக்கு பின்னர் அடுத்தகட்டமாக அக்டோபர் மாதம் 6 ஆயிரம் பேருக்கு இந்த மருந்து செலுத்தி பரிசோதனை நடத்தப்படும். பிரிட்டனிலும் பிற நாடுகளிலும் இந்த தடுப்பு மருந்து 2021 ஆம் ஆண்டு கடைகளில் கிடைக்கும்.