கம்போடிய எலிக்கும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்த இங்கிலாந்து.. எதற்காக தெரியுமா?
கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுப்பிடிக்க உதவிய எலிக்கு தங்கப்பதக்கம் கொடுத்துள்ளனர்.
லண்டன்: கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுப்பிடிக்க உதவிய எலிக்கு தங்கப்பதக்கம் கொடுத்து கவுரவித்துள்ளது இங்கிலாந்து அமைப்பு ஒன்று.
இங்கிலாந்தில் இயங்கி வரும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம் என்ற அமைப்பு கடந்த 77 ஆண்டுகளாக மனிதர்களின் நலனுக்காகச் சேவையாற்றும் விலங்குகளுக்குத் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த பதக்கம் கம்போடியாவைச் சேர்ந்த மகவா என்ற எலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கம்போடியா நாட்டில் பாதுகாப்புகளுக்காக புதைக்கப்பட்ட 60 லட்சம் வரை கண்ணிவெடிகளால் அந்நாட்டு மக்கள் பலியாகி வருகின்றனர். எனவே கண்ணி வெடிகளை அகற்றும் வேலையில் கம்போடிய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த பணியில் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது மகவா. பெரிய உடலமைப்பை கொண்ட மகவா எலி, ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒருவகை அரிய எலிகளில் ஒன்றாகும்.
மகவா எலியின் உதவியுடன் கடந்த 5 ஆண்டுகளில் 39 கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது கம்போடிய ராணுவம். 7 வயதாகும் இந்த மகவா எலிக்கு, வெடிக்காத 28 ஆபத்தான பொருட்களையும் கண்டறிந்துள்ளது. எனவே இந்த எலியை ஹீரோ என்றே அழைக்கின்றனர்.
மகவா எலிக்கு மோப்ப சக்தி அதிகம். கண்ணி வெடிகளில் உள்ள ரசாயண பொருட்களின் வாசனையை வைத்து, அதனை எலிதாக கண்டுபிடித்துவிடுகிறது மகவா. இது ராணுவத்தினருக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கிறது.
எனவே மகவாவை கௌரவிக்கும் வகையில், நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம் அமைப்பு தங்கப்பதக்கத்தை அளித்துள்ளது. இந்த போட்டியில் கலந்துகொண்ட 30 விலங்குகளில் மகவா மட்டுமே எலி. மேலும் இந்த தங்கப்பதக்கத்தை வெல்லும் முதல் எலியும் மகவா தான்.