ஏற்கனவே 2 நோய்களை காலி செய்த அனுபவம் இந்தியாவுக்கு உண்டு.. கொரோனாவையும் அழிக்கும்.. ஹூ நம்பிக்கை
லண்டன்: பெரியம்மை மற்றும் போலியோ ஆகிய சைலன்ட் கில்லர்களை ஒழிப்பதில் உலகிற்கு வழிகாட்டிய இந்தியா, உலகளவில் கிட்டத்தட்ட 15,000 உயிர்களைக் கொன்ற கொடிய கொரோனோ வைரஸ் தொற்றுநோயை ஒழிப்பதில் பங்களிக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரியான் ஜெனிவாவில் நடைபெற்ற பிரஸ் மீட் ஒன்றில் பங்கேற்று பேட்டியளித்தார்.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க மிகப்பெரிய திறனைக் கொண்டுள்ளது, ஏனெனில் பெரியம்மை மற்றும் போலியோவை ஒழித்த அனுபவம் அவர்களுக்கு உள்ளது. இலக்கு வைத்து சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா சிறப்பான நாடு.
சைலன்ட் கில்லர்கள்
"இரண்டு சைலன்ட் கில்லர்களை ஒழிப்பதில் மற்றும் அவற்றை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றியதில் இந்தியா உலகத்தையே வழிநடத்தியது" என்று ஜெனீவாவில் கோவிட் -19 தொற்றுநோய் குறித்து செய்தியாளர் சந்திப்பில் மைக்கேல் ரியான் மேலும் கூறினார்.
இந்தியா, பெரியம்மை நோயை முடிவுக்கு கொண்டு வந்து, உலகிற்கு ஒரு பெரிய பரிசை வழங்கியது. இந்தியா போலியோவையும் ஒழித்தது.
இந்தியா செய்ய முடியும்
இந்தியா மிகப்பெரிய திறன்களைக் கொண்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காண்பிக்க வழிநடத்துவது முக்கியமானது. இந்த நோயை ஒழிக்க எளிதான பதில்கள் எதுவும் இல்லை. இந்தியா போன்ற நாடுகள் முன்பு செய்ததைப் போலவே உலகிற்கும் வழி காட்ட வேண்டும். இவ்வாறு மைக்கேல் ரியான் தெரிவித்தார். உலகளவில் 334,000 க்கும் அதிகமானோர் கொரோனாவ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்புகளின் எண்ணிக்கை 14,652 ஆக உயர்ந்துள்ளதாக WHO கூறியிருந்த நிலையில், இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
டிரெண்ட்டை மாற்றலாம்
இந்தியாவில் சுமார் கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் 10 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. ஆனால் அதை மாற்றுவது இன்னும் சாத்தியம் என்று தெரிவித்தார்.
வேகமாக பரவுகிறது
டிசம்பர் பிற்பகுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்தது முதல் உலகளவில் முதல் 100,000 பேருக்கு 67 நாட்களில் தொற்று ஏற்படுகிறது. அதை ஒப்பிடுகையில், இரண்டாவது 100,000 நோயாளிகளிடம் பரவ அதற்கு 11 நாட்கள்தான் தேவைப்பட்டன. மூன்றாவது 100,000 நோயாளிகளிடம் பரவ 4 நாட்கள்தான் அதற்கு தேவைப்பட்டது. இந்த எண்ணிக்கை முக்கியம். இந்த மக்கள், அவர்களின் வாழ்க்கையும் குடும்பங்களும் தலைகீழாக மாறிவிட்டன. நாம் உதவியற்ற பார்வையாளர்கள் அல்ல. இந்த தொற்றுநோயின் பாதையை நாம் மாற்ற முடியும் என்று தெரிவித்தார்.