பணத்தை தர்றேன்னு சொல்றேன்.. ஆனா வாங்காமா என்னை பிடிப்பதிலேயே குறியா இருக்காங்க… புலம்பும் மல்லையா
லண்டன் : தாம் கொடுக்கும் பணத்தை பெறுவதை விட தம்மை பிடிப்பதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுவதாக வங்கி மோசடி மன்னன் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூபாய் 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடனாக பெற்று விட்டு அதனை திரும்பி செலுத்தாமல் தப்பியோடிய விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
இதுதொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவரை இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இது மல்லையாவுக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந் நிலையில், லண்டனில் இருந்தபடியே தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா வருவதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதித்து வருகிறேன். அதற்கான வாய்ப்புகள் இருந்தால் மேல் முறையீடு செய்வேன்.
நான் 2016ம் ஆண்டிலேயே பணத்தை வழங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் பணத்தை அதை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. உண்மையிலேயே நான் கொடுக்கும் பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.
இவ்வாறு அந்த பேட்டியில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
மல்லையா எப்போது இந்தியா அழைத்து வரப்படுவார்?? அவரிடம் இருந்து பணத்தை எப்படி வசூல் செய்ய போகிறார்கள் பொதுமக்கள் நினைத்து கொண்டிருக்க.. அவரோ கொடுத்த பணத்தை மத்திய அரசு வாங்க மறுக்கிறது என்று கூறியிருப்பது, புதிய விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறது.