லண்டன் மைதானத்தில் ’தமிழ் வாழ்க- தந்தை பெரியார் வாழ்க’ பதாகைகளுடன் கிரிக்கெட் ரசிகர்கள்!
லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதிய ஆட்டத்தின் போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 'தமிழ் வாழ்க- தந்தை பெரியார் வாழ்க' என பதாகைகளுடன் கிரிக்கெட் ரசிகர்கள் முழக்கமிட்டனர்.
இந்தியாவில் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது முதல் ஜெய் ஸ்ரீராம், வந்தே மாதாரம் முழக்கங்கள் வெறுப்பு அரசியலுக்காக முன்வைக்கப்படுகின்றன. இது பல்வேறு மாநிலங்களின் உணர்வுகளை சீண்டிவிட்டிருக்கின்றன.
லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் பதவி ஏற்க எழுந்த போது பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என முழங்கினர். இதற்கு பதிலடியாக திமுக எம்.பிக்கள் தமிழ் வாழ்க- வெல்க திராவிடம்- தந்தை பெரியார் வாழ்க- அம்பேத்கர், பெரியார் வாழ்க, மார்க்சியம் வெல்லட்டும் என எதிர்முழக்கங்களை எழுப்பினர்.
சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்.. மாநகர பேருந்துகள் இயங்காததால் அவதி
பதிலடியாக ஜெய் காளி
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பதவி ஏற்கும் பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஜெய் காளி! ஜெய் பங்களா என பதில் தந்தனர். முஸ்லிம் எம்.பிக்கள் பதவியேற்கும் போது இதேபோல் பாஜகவினர் முழக்கங்களை முன்வைத்தனர்.
ஜெய் ஸ்ரீராம் தாக்குதல்கள்
அதன்பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய் ஸ்ரீராம் முழக்கங்களை எழுப்ப வேண்டும் என தலித்துகள், சிறுபான்மையினர் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஜார்க்கண்ட்டில் இளைஞர் ஒருவர் இந்த முழக்கத்தை சொல்ல மறுத்ததால் அடித்தே கொல்லப்பட்டார். மேற்கு வங்கத்தில் மதராசா ஆசிரியர் உட்பட 3 முஸ்லிம்கள் ஓடும் ரயிலில் இருந்து தூக்கிவீசப்பட்டனர்.
லண்டனில் கிரிக்கெட் போட்டி
மாநிலங்களுக்கு எதிராக, தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் முழக்கம் முன்வைக்கப்படும் நிலையில் அதற்கு எதிர்வினைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் லண்டன் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து இடையேயான போட்டி நடைபெற்றது.
காவியில் இந்திய அணி
இப்போட்டியில் இந்திய அணியின் நீல சீருடை மாற்றப்பட்டு பாஜகவின் கொடியில் இருக்கும் காவி நிறத்திலான சீருடை இந்திய வீரர்களுக்கு தரப்பட்டிருந்தது. இது மிகப் பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பாஜகவை உக்கிரமாக எதிர்க்கும் தமிழகத்தில் இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
|
தமிழ் வாழ்க-பெரியார் வாழ்க
இதனிடையே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று போட்டியை காண சென்ற கிரிக்கெட் ரசிகர், தமிழ் வாழ்க- தந்தை பெரியார் வாழ்க என்கிற பதாகையுடன் சமூக வலைதளங்களில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஒலித்த பெரியார் வாழ்க குரல் இந்தியா முழுவதும் ஒலித்தது; இப்போது உலகம் முழுவதும் ஒலிக்கவும் தொடங்கியிருக்கிறது என பெரியார் ஆதரவாளர்கள் பெருமிதத்துடன் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.