புதிய வகை கொரோனா பரவல்... ரத்து செய்யப்பட்ட விமானங்கள்.... பிரிட்டனில் தவிக்கும் இந்திய மாணவர்கள்
லண்டன்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது தாயகம் திரும்பத் திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்கள், புதிய வகை கொரோனாவால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் நாட்டில் தான் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகமாக உள்ளது. இதன் காரணமாகப் பிரிட்டன் தனது ஊரடங்கில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 200,109 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக பிரிட்டனில் 33,364 பேருக்கும் ரஷ்யாவில் 29,350 பேருக்கும் புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
வேகமாகப் பரவும் புதிய வகை கரோனா
மற்ற கொரானா வகைகளைவிட இந்த புதிய வகை கொரோனா 70 சதவீதம் வரை வேகமாகப் பரவுவதாகப் பிரிட்டன் நாட்டின் சுகாதார செயலர் மேட் ஹான்காக் கூறியுள்ளார். மேலும், பிரிட்டனில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டைத் தாண்டி சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தடா விதிக்கும் நாடுகள்
பிரிட்டன் நாட்டில் வேகமாகப் பரவும் இந்தப் புதிய வகை கொரோனா எங்கு தங்கள் நாடுகளிலும் பரவுமோ என்ற அச்சத்தில் இந்தியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் நாட்டில் இருந்து வருபவர்களுக்குத் தடை விதித்துள்ளன. மேலும், இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான விமானங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிக்கும் மாணவர்கள்
பிரிட்டன் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் டிசம்பர் மாத தேர்வுகளை முன்கூட்டியே நடத்தின. இதன் காரணமாகப் பிரிட்டனிலுள்ள இந்திய மாணவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்தை இந்தியாவில் கழிக்கலாம் என்று திட்டமிட்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். இந்தச் சூழ்நிலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
பிரிட்டனில் சிக்கியுள்ள இந்தியர்கள்
பிரிட்டன் நாட்டில் சுற்றுலா விசா என்பது பெரும்பாலும் இன்னும் தடை செய்யப்பட்டே உள்ளது. இருப்பினும், குடும்பங்கள் உள்ளிட்ட சொந்த காரணங்களுக்காகப் பிரிட்டன் சொன்றிருந்தவர்களும் இப்போது அங்குச் சிக்கியுள்ளனர். மேலும், கொரோனா காரணமாக இந்தியா வந்திருந்தவர்கள் இம்மாத இறுதியில் பிரிட்டனுக்குத் திரும்ப திட்டமிட்டிருந்தனர். அப்போதுதான் அடுத்தாண்டு தொழில் தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இப்போது இவர்கள் அனைவரது திட்டத்தையும் இந்த புதிய வகை கொரோனா காலி செய்துவிட்டது.
என்ன சொல்கிறார் இந்திய தூதர்
இது குறித்து பிரிட்டனுக்கு இந்திய தூதர் தனது பேஸ்புக் பக்கத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் "இன்று (டிசம்பர் 22) நள்ளிரவு முதல் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்திருந்தார். மேலும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா சார்பில் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. அந்த விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அரசு சொல்வதைக் கேளுங்கள்
இந்த அறிவிப்பு குறித்து பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் (OFBJP) குழுவின் தலைவர் குல்தீப் சேகாவத், "ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் இதைக் கண்டு நீங்கள் பயப்படத் தேவையில்லை. பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுங்கள்.
நமது நன்மைக்காகவே விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு நாடுகளும் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. எனவே, நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
நீட்டிக்கப்பட்ட விசா காலக்கெடு
விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரிட்டனிலுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். அவர்களில் விசா காலக்கெடு முடியவுள்ளவர்கள் சட்ட சிக்கலை எதிர்நோக்கியிருந்தனர். இந்நிலையில், எதிர்பாராத இந்நிகழ்வைக் கருத்தில்கொண்டு விசா காலக்கெடுவை நீட்டிப்பதாகப் பிரிட்டன் உள்துறை அறிவித்துள்ளது.