கொரோனா: இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் பலி.. ஈரான், ஸ்பெயின், பிரான்சிலும் கொத்து கொத்தாக சாவு
லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால், 24 மணி நேரத்தில், இத்தாலியில் 368 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி, நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தோரின் இறப்பு எண்ணிக்கை 1,809 ஆக உயர்ந்துள்ளது. சோதநையில் பாசிட்டிவ் என கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை, சனிக்கிழமை 21,157 ஆக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, 24,747 ஆக உயர்ந்துள்ளதாக நாட்டின் சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள அரசுகள் COVID-19 தொற்றுநோயின் பரவலைக் குறைக்க தங்கள் குடிமக்களுக்கு கட்டுப்பாடுகளை முடுக்கிவிட்டன. உலகளவில் 153,000 க்கும் அதிகமான தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 5,800 பேரைக் கொன்றுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
2,000 புதிய தொற்று நோயாளிகளை உறுதிசெய்துள்ளது ஸ்பெயின். நாடு தழுவிய அளவில், மக்கள் நடமாட்டத்திற்கு அது தடை விதித்துள்ளது. இப்படி உத்தரவிடும், இரண்டாவது ஐரோப்பிய நாடு ஸ்பெயின் ஆகும். ஸ்பெயின் நாட்டில், கொரோனா இறப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 14,000க்கு சென்றுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான அதன் போராட்டம் அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் கடுமையாக தடைபட்டு வருவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
பிலிப்பைன்ஸில், தலைநகர் மணிலா சீல் வைக்கப்பட்டுள்ளது, அதன் 12 மில்லியன் மக்கள், அடுத்த ஒரு மாதத்திற்கு, பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். நகரில் பள்ளிகள் மூடப்பட்டு பெரிய நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவை பொருத்தளவில், ஐரோப்பாவிலிருந்து திரும்பும் மக்களுக்கு ஸ்கிரீனிங் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. பிரான்சில் 29 கூடுதல் கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. பிரான்சில் மொத்த இறப்பு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது, என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 900 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, ஜனவரி முதல் மொத்தம் 5,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த நாட்டில்.