இங்கிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெறிச்செயல்.. பொதுமக்களை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது
லண்டன்:இங்கிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டிய வேளையில், மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகர் ரயில்நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார். அந்த சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிக்கு தோள்பட்டையில் பலத்த கத்திக்குத்து விழுந்துள்ளது. அவர்கள் 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். தாக்கிய நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தையடுத்து, ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது முற்றிலும் எதிர்பார்க்காத சம்பவம் என்றும், தாக்குதலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
இதுபற்றி பிபிசி ஊடக பணியாளரும், சம்பவத்தினை நேரில் கண்ட சாட்சியான சாம் கிளாக் என்பவர் கூறுகையில், மற்ற நாடுகள் மீது நீங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என சந்தேகத்திற்குரிய நபர் கூறினார்.
தொடக்கத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டதை போன்று தான் இருந்தது. அதை பார்த்த காவல்துறை அதிகாரியும் அங்கு வந்தார். அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறினார்.